தலைமைச் செயலாளரை மாற்றிய உத்தரவை திரும்பப் பெறுக: தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர். பாலு கடிதம்
எந்தவிதப் புகார்களும் இல்லாத நிலையில் தலைமைச் செயலாளரை மாற்றியதற்கு திமுக கண்டனம் குறித்து...
சென்னை: எந்தவிதப் புகார்களும் இல்லாத நிலையில் தலைமைச் செயலாளரை மாற்றியும் - பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை தலைமை இயக்குநராக நியமித்து பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகளைத் திரும்பப் பெற வலியுறுத்தி தேர்தல் ஆணையத்திற்கு திமுக பொருளாளரும் - நாடாளுமன்ற மக்களவைக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:
தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தேர்தல்கள், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு, அதன் நடைமுறைகள் தொடங்கியுள்ள நிலையில், 8.4.2026 தேதியிட்ட உத்தரவின் வாயிலாக, தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி வந்த என். முருகானந்தம் பதிலாக, எம். சாய் குமார் தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக ஆணையம் நியமித்துள்ளது.
Advertisement
இந்தத் தன்னிச்சையான மற்றும் நியாயமற்ற பணிமாறுதலுக்கு, திமுக தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் இதற்கான எந்தவிதக் காரணங்களும் குறிப்பிடப்படவில்லை; மேலும், தலைமைச் செயலாளர் முருகானந்தம் குறித்து எந்தவொரு முக்கிய அரசியல் கட்சியும் எந்தவிதப் புகாரும் அளிக்கவில்லை. அவர் அந்தப் பதவியிலிருந்து இடமாற்றம் செய்யப்படுவதற்கு எந்தவிதமான தர்க்கரீதியான அல்லது நியாயமான காரணங்களும் இல்லை.
தமிழ்நாட்டில் தேர்தல் நடைமுறைகள் தொடங்கி நடைபெற்று வந்தாலும், அதனால், அரசாங்கத்தின் செயல்பாடுகள் முடங்கிவிட கூடாது. அடுத்த அரசு அமைந்து புதிய அமைச்சரவை பதவியேற்கும் வரையில், நிர்வாகத்தில் ஒரு தொடர்ச்சி இருக்க வேண்டியது அவசியமாகும். குறிப்பாக, அரசியல்கட்சித் தலைமைத் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் இந்த காலகட்டத்தில், அரசாங்கத்தின் அன்றாடச் செயல்பாடுகளைக் கண்காணித்து நெறிப்படுத்துபவர் தலைமைச் செயலாளரே ஆவார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முந்தைய இந்த மாதத்தில், நிர்வாகம் சார்ந்த பல்வேறு வழக்கமான கோப்புகள், நீதிமன்ற வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட பல முக்கியப் பணிகள் கையாளப்பட வேண்டியுள்ளன. முருகானந்தம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி வருவதால், தேர்தல் காலத்தில் அரசாங்கத்தின் செயல்பாடுகள் எந்தவிதத் தடையுமின்றிச் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு மிகவும் பொருத்தமானவர் அவரே ஆவார்.
இத்தகைய சூழலில், 8.4.2026 தேதியிட்ட தங்கள் உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற்றுக்கொண்டு, என்.முருகானந்தம் இஆப-வை மீண்டும் தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராகப் பணியமர்த்துமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
அதேபோல, 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதியிட்ட உத்தரவின் வாயிலாக, டாக்டர் சந்தீப் மிட்டல் ஐபிஎஸ், காவல்துறை தலைமை இயக்குநராக (ஆயுதப்படை மற்றும் ஊழல் தடுப்பு & கண்காணிப்புப் பிரிவு) தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
தமிழ்நாட்டின் தற்போதைய ஆளுங்கட்சியாகவும், மிகப்பெரிய அரசியல் கட்சியாகவும் திகழும் திமுக சார்பில், டாக்டர் சந்தீப் மிட்டல் அவர்களை டிவிஏசி -இன் தலைமை இயக்குநராக நியமித்திருப்பதற்கு எங்களின் கடும் ஆட்சேபணையைத் தெரிவித்துக் கொள்கிறோம். முதலாவதாக, டிவிஏசி-இன் தலைமை இயக்குநர் (டிஜிபி) பதவிக்கும், தேர்தல் நடத்தும் பணிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
இந்திய அரசியலமைப்பின் 324-வது பிரிவின் கீழ் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் என்பது, வாக்காளர் பட்டியலைத் தயாரித்தல் மற்றும் தேர்தல்களை நடத்துதல் ஆகிய பணிகளை மேற்பார்வையிடுதல், வழிநடத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு மட்டுமே உரியதாகும். தமிழ்நாடு தேர்தலை நோக்கிச் செல்கிறது என்பதற்காக மட்டும், அரசின் அனைத்து அதிகாரங்களையும் செயல்படுத்தும் வகையில், தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்ட ஒரு வரம்பற்ற அதிகாரமாக இது அமையாது. அரசியலமைப்பும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டங்கள் 1950 மற்றும் 1951-உம், தேர்தல் தொடர்பான பணிகளைச் செய்வதற்கான அதிகாரத்தை மட்டுமே தேர்தல் ஆணையத்திற்கு வழங்கியுள்ளன.
உச்சநீதிமன்றம் தனது பல்வேறு தீர்ப்புகளில் சுட்டிக்காட்டியுள்ளதைப் போலவே, அரசியலமைப்பின் 324-வது பிரிவின்கீழ் உள்ள அதிகாரம் என்பது தேர்தல்களை நடத்துவது தொடர்பான பணிகளுக்கு மட்டுமே பொருந்தும். தேர்தல் காலத்தில், தேர்தல் ஆணையமானது அரசுக்கு மாற்றாகச் செயல்படுவதில்லை. டிவிஏசி என்பது, அரசு அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். தேர்தல்களை நடத்துவதில் டிவிஏசி-க்கு எவ்விதப் பங்கும் இல்லை. எனவே, தேர்தல்களை நடத்துவது தொடர்பான பணிகளுடன் தொடர்பில்லாத அரசுப் பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிக்கவோ அல்லது இடமாற்றம் செய்யவோ தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்பதே எங்களின் முதன்மையான ஆட்சேபணையாகும்.
இரண்டாவதாக, டிவிஏசி-இன் செயல்பாடுகளின் தன்மையைக் கருத்தில் கொண்டு பார்க்கையில், களங்கமற்ற நேர்மை, நடுநிலைமை மற்றும் எவ்விதக் குறைபாடுகளுமற்ற பணிப்பதிவு ஆகியவற்றைக் கொண்ட ஓர் அதிகாரியை மட்டுமே டிவிஏசி-இன் தலைவராக நியமித்திருக்க வேண்டும். டாக்டர் சந்தீப் மிட்டல் அவர்கள் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் ஆதரவாளர் என்பது அனைவரும் அறிந்த ஒரு உண்மையாகும். இது வெறும் யூகத்தின் அடிப்படையில் எழுப்பப்படும் ஐயம் அல்ல; மாறாக, டாக்டர் சந்தீப் மிட்டல் அவர்கள் தனது சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிட்டுள்ள கருத்துக்களின் அடிப்படையில், அவரே ஒப்புக்கொண்ட ஒரு உண்மையாகும். அவர் பதிவிட்டுள்ள பின்வரும் எக்ஸ் தளப் பதிவைத் தயவுசெய்து காணவும்:
மேலும், இஸ்லாம் மற்றும் "இடதுசாரி சித்தாந்தம்" குறித்து சமூக ஊடகங்களில் அவர் பதிவிட்டுள்ள கருத்துகள், அந்த அதிகாரி ஒருதலைப்பட்சமாகச் செயல்படுபவரே தவிர நடுநிலையாளர் அல்ல என்பதில், நேர்மையாகச் சிந்திக்கும் குடிமக்களுக்கு எவ்வித ஐயமும் இல்லை. பின்வரும் ட்வீட்டைப் தயவுசெய்து காணவும்:
பாஜக தலைமையிலானதும், இத்தேர்தல் களத்தில் பிரதான எதிர்க்கட்சியாகப் போட்டியிடும் அதிமுகவை உள்ளடக்கியதுமான 'தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு' ஆதரவாகவே அவர் செயல்படுவார் என்பதில், எங்கள் மனதிலும் தமிழ்நாட்டு மக்களின் மனதிலும் எவ்வித ஐயமும் இல்லை.
தனது சித்தாந்தச் சார்புகளைத் தவிர, டாக்டர் மிட்டல் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன. டாக்டர் மிட்டல் நிர்வாகப் பிரிவு DIG-யாகப் (காவல்துறை துணைத் தலைவர்) பணியாற்றிய 'தேசிய குற்றவியல் மற்றும் தடயவியல் அறிவியல் நிறுவனத்தில்' பணிபுரிந்த சங்கல்ப் ஆனந்த், 2014-ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில், தனது மனைவியுடன் இணைந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். தனது தற்கொலைக் குறிப்பில், என்ஐசிஎப்எஸ்-இல் நடைபெற்ற ரூ.250 கோடி மதிப்பிலான கட்டுமான ஊழலுக்கு டாக்டர் மிட்டல், மற்றொரு ஐபிஎஸ் அதிகாரியான கமலேந்திர பிரசாத் (உபி பிரிவு) மற்றும் வேறு சிலரே காரணம் என்று அவர் குற்றம் சாட்டியிருந்தார். டாக்டர் மிட்டல் மீது உத்தரப்பிரதேச அரசு முதல் தகவல் அறிக்கையையும் பதிவு செய்தது.
அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மை காரணமாகவே, நீண்ட காலமாக மத்தியப் பணிக்கு அனுப்பப்பட்டிருந்தபோதிலும், ஒன்றிய அரசு அவரை கூடுதல் காவல்துறைத் தலைவர் பதவிக்குத் தேர்வு செய்து அங்கீகரிக்கவில்லை; அதேவேளையில், 1998-ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த பிற அதிகாரிகள் ஏடிஜிபி-யாகப் பதவி உயர்வு பெற்று அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். அவரைவிடப் பணியில் மிகவும் இளையவர்களான (2007-ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த) அதிகாரிகளுக்குக்கூட 'சிறந்த சேவைக்கான காவல்துறைப் பதக்கம்' வழங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 13 ஆண்டுகளாக டாக்டர் மிட்டலுக்கு அப்பதக்கம் வழங்கப்படவில்லை.
டாக்டர் மிட்டல் பொதுவெளியில் வெளியிட்டுள்ள கருத்துக்கள், அவர் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் தீவிர ஆதரவாளர் என்பதையும், முஸ்லிம்களுக்கும் இடதுசாரிச் சித்தாந்தத்திற்கும் எதிராக வெறுப்புப் பேச்சுகளைப் பேசிய நீண்டகாலப் பின்னணியைக் கொண்டவர் என்பதையும் எங்கள் மனதில் எவ்வித ஐயமுமின்றி உறுதிப்படுத்துகின்றன. அவர் மீது கடுமையான ஊழல் மற்றும் முறைகேடான நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகளும் நிலுவையில் உள்ளன. இத்தகைய பின்னணியைக் கொண்ட ஒரு அதிகாரியை டிவிஏசி-இன் (ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை) தலைவராக நியமிப்பது, பொதுமக்களின் நலனுக்கு உகந்ததாக இருக்காது. 2020-ஆம் ஆண்டில், டாக்டர் மிட்டல் சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவுகள், 'அகில இந்தியப் பணிகள் (நடத்தை) விதிகள், 1968'-க்கு முரணாக அமைந்திருந்தன எனக் குறிப்பிட்டு; அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரி, அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடிதம் எழுதியிருந்தது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, டாக்டர் மிட்டல் மார்க்சிஸ்ட் கட்சியை "நகர்ப்புற நக்சல்கள்" என்று வர்ணித்தார். அரசியல் சார்ந்த விவகாரங்கள் குறித்து அவர் வெளியிட்டிருந்த சில ட்வீட்கள், ஆர்எஸ்எஸ் -இன் வலதுசாரி சித்தாந்தத்தின் மீதான அவரது விசுவாசத்தையும் ஆதரவையும் வெளிப்படுத்துவதாக 'The News Minute' இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. (காண்க: https://www.thenewsminute.com/tamil-nadu/cpim-asks-tn-govt-sack-addl-dgp-sandeep-mittal-pro-rss-posts-twitter-133191).
ஒரு நடுநிலையான மற்றும் பாரபட்சமற்ற அரசியலமைப்பு அமைப்பாகச் செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் எனும் நிறுவனம், பாஜகவின் தேர்தல் முகவராகச் செயல்படுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தேர்தல் ஆணையம் அரசியலமைப்புக்கும் இந்நாட்டின் சட்டங்களுக்கும் மேலானது என்று, ஆணையத்தில் உள்ள எவருடைய மனதிலும் எவ்விதத் தவறான எண்ணமும் இருக்காது என்று நாங்கள் நம்புகிறோம்.
தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் கேரள மாநிலங்களில் தேர்தல் ஆணையம் எடுத்துவரும் நடவடிக்கைகளை இந்திய மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். அவை அசாமில் (அங்கு எந்தவொரு உயர் அதிகாரியும் இடமாற்றம் செய்யப்படவில்லை) தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு முற்றிலும் மாறாக இருக்கின்றன. சொல்லப்போனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போதே, பாஜகவைச் சேர்ந்த அசாம் முதல்வரின் அரசியல் எதிரிகளுக்கு எதிராக அசாம் காவல்துறை ஒருதலைப்பட்சமான மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
எனவே, 8.4.2026 தேதியிட்ட தேர்தல் ஆணையத்தின் உத்தரவைத் திரும்பப் பெறுமாறும்; தமிழ்நாட்டில் ஆயுதப்படைகள், கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவுகளின் தலைமை இயக்குநராகப் பணியாற்றும் டாக்டர் சந்தீப் மிட்டலை அந்தப் பதவியிலிருந்து நீக்குமாறும், தலைமைத் தேர்தல் ஆணையர், மற்றும் தேர்தல் ஆணையர்கள் இருவர் ஆகிய மூவரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இதற்கு நீங்கள் இணங்கத் தவறும்பட்சத்தில், சட்டத்திற்கு உட்பட்டுத் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள நாங்கள் நிர்பந்திக்கப்படுவோம் என அவர் கூறியுள்ளார்.