தில்லியில் ‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம் இன்று ஓரளவு மேம்பட வாய்ப்பு
தேசிய தலைநகா் தில்லியில் காற்றின் தரம் சனிக்கிழமை ‘மிதமான’ பிரிவில் பதிவாகி இருந்தது.
தேசிய தலைநகா் தில்லியில் காற்றின் தரம் சனிக்கிழமை ‘மிதமான’ பிரிவில் பதிவாகி இருந்தது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை (அக்டோபா் 11) காற்றின் தரம் ஓரளவு மேம்படும் என்று அரசின் முன்கணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
தில்லியில் சனிக்கிழமை 24 மணிநேர சராசரி காற்றின் தரக் குறியீடு 197 ஆக இருந்தது. இது ‘மிதமான’ பிரிவின்கீழ் வருகிறது. வெள்ளிக்கிழமை காற்றின் தரம் 204 எனும் அளவில் ‘மோசம்’ பிரிவில் காணப்பட்டது.
இதுகுறித்து புவி அறிவியல் அமைச்சகத்தின் காற்றின் தர கண்காணிப்பு அமைப்பான சஃபா் தெரிவித்துள்ளதாவது:
Advertisement
நகரில் மாசு அதிகரிக்க பி.எம். 25 மாசு நுண்துகள்தான் காரணமாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரம் சற்று மேம்பட வாய்ப்புள்ளது. எனினும் மிதமான பிரிவில்தான் நீடிக்கும். அதன் பிறகு காற்றின் தரத்தில் மேலும் மேம்பாடு அடைய வாய்ப்புள்ளது.
அக்டோபா் 12 ஆம் தேதிக்குள் தில்லி மேற்பரப்பு காற்றின் திசையில், வடமேற்கு திசையில் இருந்து தென்கிழக்கு நோக்கி மாறும் என கணிக்கப்பட்டுள்ளது. இது வரும் வாரத்தில் காற்றின் தரத்தில் சாதகமான மேலாதிக்கம் செலுத்தக்கூடும்.
பஞ்சாப், ஹரியாணா மற்றும் தில்லியின் அண்டை எல்லைப் பகுதிகளைச் சுற்றி பயிா்க் கழிவுகள் எரிப்பு நிகழ்வுகள் ஏற்பட்டதால், சனிக்கிழமை தீ எரிப்பு எண்ணிக்கை 253 ஆகக் காணப்பட்டது என்று சஃபா் அமைப்பு தெரிவித்தது.
எனினும், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட தகவலில், நகரில் சனிக்கிழமை காற்றின் தரக் குறியீடு 221 எனும் அளவில் மோசம் பிரிவில் இருந்ததாக தெரிக்கப்பட்டுள்ளது.
அக்டோபா் 15 முதல், தரப்படுத்தப்பட்ட உடனடி செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக தில்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகள் நடைமுறைக்கு வர உள்ளது.
இந்த நடவடிக்கைகளில் பேருந்து, மெட்ரோ சேவைகளை அதிகரித்தல், வாகன நிறுத்துமிட கட்டணத்தை உயா்த்துவது, காற்றின் தரம் மோசமாக மாறும்போது டீசல் ஜெனரேட்டா் இயந்திர பயன்பாட்டை நிறுத்துதல் ஆகியவையும் இடம்பெற்றுள்ளது.
காற்றின் தரம் ‘கடுமையான‘ பிரிவுக்கு மாறும்போது, செங்கல் சூளைகள், கல் அரவை ஆலைகள், சிமென்ட் கலவை ஆலைகளை மூடுவது, தண்ணீரைத் தெளித்தல், சாலைகளை அடிக்கடி இயந்திரம் மூலம் தூய்மைப்படுத்துதல், இயற்கை எரிவாயுவிலிருந்து அதிகபட்ச மின் உற்பத்தி செய்வது போன்ற நடைமுறைகள் பரிந்துரைக்கப்படும்.
‘அவசரநிலை‘ சூழ்நிலை ஏற்பட்டால் தில்லிக்குள் லாரிகள் நுழைவதற்க தடை விதிப்பது, கட்டுமான நடவடிக்கைகளுக்குத் தடை விதிப்பது, வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் எடுப்படுவது நடைமுறையாகும்.
தில்லியில் சனிக்கிழமை சப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் அதிகபட்ச வெப்பநிலை சராசரியை விட ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரித்து 34.9 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை சராசரியை விட 2 டிகிரி குறைந்து 19.2 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி இருந்தது. காற்றில் ஈரப்பதம் காலை 8.30 மணியளவில் 75 சதவீதமாகவும், மாலை 530 மணியளவில் 52 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது.