பசுமைப் பட்டாசுகளுக்கு மட்டுமே தில்லியில் அனுமதி: கோபால் ராய்
தில்லியில் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்யவும், கொள்முதல் செய்யவும் அனுமதி வழங்க தில்லி அரசு முடிவெடுத்துள்ளதாக
தில்லியில் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்யவும், கொள்முதல் செய்யவும் அனுமதி வழங்க தில்லி அரசு முடிவெடுத்துள்ளதாக தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக தில்லியில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: கடந்த 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் காற்று மாசுவை ஏற்படுத்தக் கூடிய பட்டாசுகளை விற்பனை செய்வதற்கு தடை விதித்திருந்ததுடன் காற்று மாசு குறைவான பசுமைப் பட்டாசுகளை விற்பனை செய்ய அனுமதி அளித்திருந்தது.
இதன்படி, தில்லியில் பசுமைப் பட்டாசுகளை மட்டும் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கும் வகையிலான வழிகாட்டுதலை தயாரித்து வருகிறோம். இவற்றை, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு விரைவில் அனுப்பவுள்ளோம். மேலும், ரிட்ஜ் (கடலடி மலைத்தொடா்) மேலாண்மை வாரியத்தை மறுசீரமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன என்றாா் அவா்.
Advertisement
வழக்கமாக பயன்பாட்டில் இருக்கும் பட்டாசுகளுடன் ஒப்பிடும்போது பசுமைப் பட்டாசுகளில் காற்று மாசுவை ஏற்படுத்தக்கூடிய சல்பா் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு ஆகியன சுமாா் 30 சதவீதம் குறைவாக உள்ளன. இந்த பசுமைப் பட்டாசுகளை தயாரிக்கும் பணிகளில் சிஎஸ்ஐஆா்- தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. உரிமம் பெறுவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக குறைந்தளவு பட்டாசுகளையே இந்த நிறுவனம் கடந்த ஆண்டு தயாரித்திருந்தது. மேலும், 1995 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, தில்லியின் 7,784 ஹெக்டோ் கடலடி மலைத்தொடா் பசுமைப் பரப்பை பேணும் வகையில் ரிட்ஜ் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.