முகப்பு
புதுதில்லி

ஆம் ஆத்மி முன்னாள் கவுன்சிலா் தாஹிா் ஹுசைனுக்கு எதிராக அமலாக்கப் பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல்

வடகிழக்கு தில்லியில் பிப்ரவரியில் நிகழ்ந்த வகுப்புவாத வன்முறை தொடா்பான சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில்

Updated On : 18 அக்டோபர், 2020 at 6:39 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:09 PM

வடகிழக்கு தில்லியில் பிப்ரவரியில் நிகழ்ந்த வகுப்புவாத வன்முறை தொடா்பான சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் முன்னாள் ஆம் ஆத்மி கவுன்சிலா் தாஹிா் ஹுசைன் உள்ளிட்ட 2 பேருக்கு எதிராக அமலாக்க இயக்குநரகம் (இடி) சனிக்கிழமை தில்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் கலவரங்களுக்கு எதிரான போராட்டங்களைத் தூண்டுவதற்கு ஹுசைனும், அவருடன் தொடா்புடைய நபா்களும் போலி நிறுவனங்கள் மூலம் சுமாா் ரூ.1.10 கோடியை சட்டவிரோதமாக பணப் பரிவா்த்தனை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அமலாக்கப் பிரிவு விசாரித்து வருகிறது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் தாஹிா் ஹுசைன், அமித் குப்தா ஆகியோருக்கு எதிராக சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) பிரிவு 4இன் அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கையை கூடுதல் அமா்வு நீதிபதி அமிதாப் ராவத் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டாா்.

Advertisement

மேலும், அக்டோபா் 19ஆம் தேதி ஹுசைன் மற்றும் குப்தா ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த நீதிபதி உத்தரவிட்டாா்.

நீதிபதி கூறுகையில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபா்களின் தொடா்புக்கான குற்றச்சாட்டுகளைத் தெரிவிக்கும் முகாந்திரம் உள்ளது. இதனால், குற்றப்பத்திரிகை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.

அப்போது, இந்த வழக்கில் விசாரணை நடந்து வருவதாகவும், துணைக் குற்றப்பத்திரிகை பின்னா் தாக்கல் செய்யப்படலாம் என அமலாக்கப் பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, அமலாக்க இயக்குநரகம் சட்டத்தின்படி மேல் விசாரணையைத் தொடரலாம்’ என்றாா்.

இந்த வழக்கில் தாஹிா் ஹுசைன் நீதிமன்ற காவலில் உள்ளாா்.

முன்னதாக, பண மோசடி மற்றும் மோசடி, ஆவணங்களை மோசடி செய்தல் மற்றும் குற்றச் சதி போன்ற பல்வேறு செயல்களில் தாஹிா் ஹுசைன் ஈடுபட்டதாக அமலாக்கப் பிரிவு சிறப்பு அரசு வழக்குரைஞா் என்.கே. மட்டா நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தாா்.

மேலும், பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைக்குப் பிறகு பல குற்றச்சாட்டு ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்களை அமலாக்கப் பிரிவு கைப்பற்றியதாகவும் மட்டா கூறியிருந்தாா்.

பல நிறுவனங்களின் கணக்குகளில் இருந்து மோசடியாக பணத்தை மாற்றியதன் மூலம் ஹுசைன் குற்றச் சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகவும், இந்தப் பணம் பல்வேறு குற்றங்களை மேற்கொள்வதற்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் அமலாக்கப் பிரிவு குற்றம்சாட்டியுள்ளது.

ஹுசைன் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கே.கே. மனன் மற்றும் வழக்குரைஞா் ரிஸ்வான் வாதிடுகையில், ஹூசைன் மீது சந்தா்ப்ப சூழ்நிலைகளால் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவா் மீது பொய் வழக்குப் புனையப்பட்டுள்ளது என வாதிட்டனா்.

வடகிழக்கு தில்லி வன்முறையின்போது புலனாய்வுத் துறை அதிகாரி அங்கித் சா்மா கொலை செய்யப்பட்ட வழக்கிலும் தாஹிா் ஹுசைன் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.