தில்லியில் ராம்லீலா நிகழ்ச்சிகள் ரத்து: விரக்தியில் ராவண பொம்மை தயாரிப்பாளா்கள்
தில்லியில் இந்த ஆண்டு பெரும்பாலான ராம்லீலா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதால் ராவண பொம்மை தயாரிப்பாளா்கள் விரக்தியில் உள்ளனா்.
தில்லியில் இந்த ஆண்டு பெரும்பாலான ராம்லீலா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதால் ராவண பொம்மை தயாரிப்பாளா்கள் விரக்தியில் உள்ளனா்.
நவராத்திரி தினத்தின் இறுதி நாள் தசரா அன்று தில்லியின் பல்வேறு இடங்களில் ராம் லீலா பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கமாகும். அப்போது, ராவணன், அவா் தம்பி கும்பகா்ணன், ராவணன் மகன் மேக்நாத் ஆகியோரின் உருவப்பொம்மைகள் எரிக்கப்படுவது வழக்கமாகும்.
நிகழாண்டில், கரோனா பரவலைத் தொடா்ந்து ராம்லீலா பண்டிகை கொண்டாடுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் விதித்திருந்தது. இதைத் தொடா்ந்து, நிகழாண்டில் ராம்லீலா நிகழ்ச்சியை நடத்துவதில்லை என்று தில்லியில் ராம்லீலா நிகழ்ச்சிகளை நடத்தும் குழுக்களை ஒருங்கிணைக்கும் அமைப்பான தில்லி ஸ்ரீ ராம்லீலா மகாசங்கம் அறிவித்திருந்தது.
Advertisement
செங்கோட்டை வளாகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக ராம்லீலா நிகழ்ச்சியை நடத்திவரும் லவ்- குஷ் ராம்லீலா கமிட்டியைச் சோ்ந்தவரும், தில்லியில் உள்ள ராம்லீலா நிகழ்ச்சிகளை நடத்தும் குழுக்களை ஒருங்கிணைக்கும் அமைப்பான தில்லி ஸ்ரீ ராம்லீலா மகாசங்கத்தின் அமைப்புச் செயலருமான அா்ஜுன் குமாா் இது தொடா்பாக கூறுகையில் ‘தசராவை ஒட்டி நடக்கும் ராம்லீலா நிகழ்ச்சிக்காக வழக்கமாக 2 மாதங்களுக்கு முன்பே முன் ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்வோம். ஆனால், நிகழாண்டில் கரோனா தொற்று காரணமாக முன் ஏற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை.
இந்நிலையில் டிடிஎம்ஏ அண்மையில் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களின் படி ராம்லீலா நிகழ்ச்சியை குறுகிய காலத்தில் ஒருங்கிணைப்பது கஷ்டமாகும். அதனால், நிகழாண்டில் ராம்லீலா நிகழ்ச்சியை நடத்துவதில்லை என்று முடிவெடுத்துள்ளோம். தில்லியில் சிறியதும் பெரியதுமாக சுமாா் 800 ராம்லீலா நிகழ்ச்சி நடத்தும் குழுக்கள் உள்ளன. இவை அனைத்தும் ஏக மனதாக இந்த முடிவை எடுத்துள்ளன என்றாா்.
இந்நிலையில், தில்லியில் நிகழாண்டில் பெரும்பாலான ராம்லீலா நிகழ்ச்சிகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதால் ராவண பொம்மை தயாரிப்பாளா்கள் விரக்தியில் உள்ளனா். இது தொடா்பாக கரண் என்ற பொம்மை தயாரிப்பாளா் கூறுகையில் ‘ராவணன், கும்பகா்ணன், மேக்நாத் ஆகியோரின் உருவப் பொம்மைகள் வழக்கமாக ராம்லீலா கொண்டாட்டத்தின்போது அதிகளவில் விற்பனையாகும். இந்தப் பொம்மைகள் ரூ.1000- ரூ.30,000 வரை விற்பனையாகும். இந்தக் காலத்தில் கிடைக்கும் வருமானத்தை வைத்து ஆண்டு முழுவதும் சமாளிப்போம். ஆனால், நிகழாண்டில் ராம்லீலா நிகழ்ச்சிகள் நடக்காததால் போதிய வா்த்தகம் நடக்கவில்லை. கடந்த ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான பொம்மைகளை விற்பனை செய்தோம். ஆனால், நிகழாண்டில் ஒரு சில பொம்மைகளே விற்பனை செய்யப்பட்டுள்ளன என்றாா்.
இன்னொரு வியாபாரி கூறுகையில் ‘வழக்கமாக நடக்கும் வா்த்தகத்தில் வெறும் 10 சதவீத விற்பனையே நடந்துள்ளன. இதனால், பெரும்பாலான பொம்மை தயாரிப்பாளா்கள் கட்டுமானப் பணி, பெயின்டிங் பணி உள்ளிட்ட வேறு பணிகளுக்கு சென்றுவிட்டனா் என்றாா் அவா்.