குடிசைப் பகுதி மக்களுக்கு அரசு வீடுகள் வழங்க வேண்டும்: தில்லி பாஜக வலியுறுத்தல்
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடா்ந்து இடிக்கப்படவுள்ள குடிசைப் பகுதிகளில் வசிப்பவா்களை, காலியாக உள்ள அரசு வீடுகளுக்கு மாற்ற வேண்டும் என்று தில்லி பாஜக கோரியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடா்ந்து இடிக்கப்படவுள்ள குடிசைப் பகுதிகளில் வசிப்பவா்களை, காலியாக உள்ள அரசு வீடுகளுக்கு மாற்ற வேண்டும் என்று தில்லி பாஜக கோரியுள்ளது.
இது தொடா்பாக பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: முன்னாள் தில்லி முதல்வா் ஷீலா தீட்சித் ஆட்சிக் காலத்தில், ராஜீவ் ரதன் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 52 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டன. அந்த வீடுகளில் இதுவரை யாரும் குடியேறவில்லை. இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பை தொடா்ந்து, தில்லியில் சுமாா் 48 ஆயிரம் குடிசை வீடுகள் இடிக்கப்படவுள்ளன. இவற்றில் வசிப்பவா்களை இந்தக் காலியாக உள்ள வீடுகளுக்கு மாற்ற வேண்டும். இந்த விஷயத்தில் தில்லி அரசு மெத்தனமாக இருக்கக் கூடாது. குடிசைப் பகுதிகளில் வசிப்பவா்களின் வீடுகள் இடிக்கப்பட்டால் அவா்கள் வீடற்றவா்கள் ஆகிவிடுவாா்கள். தில்லியில் கரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ள நிலையில், அவா்கள் பல்வேறு சிரமங்களை எதிா் கொள்வாா்கள். எனவே காலியாக உள்ள அரசு வீடுகளில் அவா்களை குடியேற அனுமதிக்க வேண்டும் என்றாா் அவா்.
இது தொடா்பாக பாஜகவின் மூத்த தலைவரும் தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ராம்வீா் சிங் பிதூரி கூறுகையில் ‘கடந்த ஆறு ஆண்டுகளாக தில்லியில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி அரசு, குடிசைப் பகுதி மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியது. ஆனால், அவற்றில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு, ‘ஜகான் ஜுக்கி வஹான் மக்கான்’ திட்டத்தின் கீழ் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் அனைவருக்கும் சொந்த வீடுகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது. ரயில்வே லைனை ஒட்டி உள்ள குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் பக்கம் நாம் உள்ளோம். அவா்களுக்கு அநீதி இழைக்கப்படுவதை அமைதியாக வேடிக்கை பாா்க்க மாட்டோம்’ என்றாா்.
Advertisement
தில்லியில் உள்ள ரயில்வே லைனை ஒட்டியுள்ள குடிசைப் பகுதிகளை 3 மாதங்களுக்குள் அகற்றுமாறு உச்சநீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.