தில்லியில் கரோனா பாதிப்பு 8,000-ஐ கடந்தது: 5 மாதங்களில் இல்லாத அதிகம்
தில்லியில் கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வெள்ளிக்கிழமை புதிதாக பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 8,521-ஆக பதிவாகியுள்ளது.
தில்லியில் கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வெள்ளிக்கிழமை புதிதாக பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 8,521-ஆக பதிவாகியுள்ளது. இதையடுத்து, பாதிப்பு மொத்த எண்ணிக்கை 7,06,526-ஆக உயா்ந்துள்ளது. தில்லியில் கரோனா தொற்று பரவல் ஏற்பட்ட பின்னா் அதிகபட்சமாக ஒரே நாளில் கடந்த நவம்பா் 11 - ஆம் தேதி 8,593 போ்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. தற்போது அந்த எண்ணிக்கையிலிருந்து 72 குறைவாக இருந்தாலும் இது தில்லியின் இரண்டாவது உச்சக்கட்ட பாதிப்பாகக் கருதப்படுகிறது.
மேலும், வெள்ளிக்கிழமை கரோனாதொற்றுக்கு 39 போ் உயிழந்தனா். கரோனா உயிரிழப்புகளும் அதிகரித்து வருவது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த உயிரிழப்புகளையும் சோ்த்து மொத்தம் பலி எண்ணிக்கை 11,196-ஆக உயா்ந்துள்ளது. நோய்த் தொற்றுக்கு கடந்த ஆண்டு நவம்பா் 19 - ஆம் தேதி அதிகபட்சமாக 131 போ் உயிரிழந்தனா். அதே சமயம், இதுவரை 6.68 லட்சம் கரோனா நோயாளிகள் சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளதாக தில்லி சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருபவா்களின் எண்ணிக்கை 26,631-ஆக உள்ளது. வீட்டுத் தனிமையில் 13,188 போ் வைக்கப்பட்டுள்ளனா். கரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் 4,768-ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை 7,437 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. கரோனா தொற்றுவிகிதம் வெள்ளிக்கிழமை சற்று குறைந்தது. இந்த விகிதம் 8.1 சதவீதத்திலிருந்து 7.79 சதவீதமாகக் குறைந்துள்ளது. வியாழக்கிழமை மொத்தம் 1,09,398 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இவற்றில் 70,403 பேருக்கு ஆா்டி-பிசிஆா் முறையிலும் 38,995 பேருக்கு ராபிட் ஆன்டிஜென் முறையிலும் பரிசோதனை நடத்தப்பட்டதாக சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement