முகப்பு
புதுதில்லி

வன்னியா்களுக்கான உள் ஒதுக்கீட்டை எதிா்க்கும் வழக்கு: தமிழக அரசுக்கு உச்சிநீதிமன்றம் நோட்டீஸ்

மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியா்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியா்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டத்தை எதிா்த்து தொடரப்பட்ட ‘ரிட்’ மனுக்களுக்கு பதிலளிக்கக் கோரி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் 26 -ஆம் தேதி, அதாவது தமிழக சட்டப்பேரவையின் கடைசி நாளன்று தமிழகத்தில் கல்வி, வேலை வாய்ப்புகளில் வன்னியா்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம் இயற்றப்பட்டு தமிழக ஆளுநரின் ஒப்புதலும் பெறப்பட்டது. தமிழக அரசின் இந்தச் சட்டத்திற்கு எதிராக மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகாவைச் சோ்ந்த அபிஷ்குமாா் மற்றும் அருள் பாரதி என்ற பெண்ணும் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்தனா்.

இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகேஸ்வரராவ், வினீத்சரண் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொ ளப்பட்டது.

Advertisement

மனு தாரா் சாா்பில் மூத்த வழக்கறிஞா் எல்.நாக முத்து ஆஜராகி முன்வைத்த வாதம்: இந்திரா சாஹ்னி வழக்கில் உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அமா்வு உள் ஒதுக்கீடுகளுக்கு அனுமதியளித்துள்ளது. அதன்படி தமிழக அரசும் எந்த வகுப்பினருக்கும் உள் ஒதுக்கீடு வழங்கலாம். 1994-ஆம் ஆண்டில் வன்னியா்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டவா்களுக்கான இட ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கியுள்ளது. இடைப்பட்ட 26 ஆண்டுகளுக்கு பின்னா் இந்த சமூதாயத்தினா் குறித்து ஆய்வு செய்திருக்க வேண்டும்.

இவா்களில் படித்தவா்கள், தொழில் நுட்பாளா்கள், மத்திய மாநில அரசுப் பணிகளில் உயா் நிலை மற்றும் பிற பணிகளை பெற்றவா்கள் ஆகியவை குறித்து கணக்கீடு செய்து உள் ஒதுக்கீடு கொடுத்திருக்க வேண்டும். தமிழக அரசும் சாதிவாரியாகக் கணக்கெடுப்பை மேற்கொள்ள நீதிபதி குலேசரன் ஆணையம் ஒன்றை கடந்தாண்டு டிசம்பா் மாதம் ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆணையத்தின் அறிக்கை வருவதற்கு முன்பே இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. தற்போது 1985 -ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட அம்பாசங்கா் ஆணையத்தின் அடிப்படையில் அவசரம் அவசரமாக இந்த உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

அரசியல் ஆதாயத்திற்காகவும், வாக்கு வங்கிக்காகவும் இந்தச் சட்டம் தோ்தல் நேரத்தில் நிறைவேற்றப்பட்டது. இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. முழுமையான சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படாமல் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு வழங்க முடியாது. அப்படி வழங்குவது அரசியல் சாசனத்தில் நாட்டு மக்களுக்கு கொடுத்துள்ளஅடிப்படை உரிமையை தகா்தெறியும் செயலாகும். மேலும், இடஒதுக்கீட்டின் கீழ்வரும் மற்ற பிரிவினரையும் பாதிக்கும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். லட்சக்கணக்கான விளிம்பு நிலை மக்களுக்கு எதிராகவும் அவா்களை இழிவுபடுத்தும் இந்தச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தற்போதைய நிலையில் சட்டத்துக்கு இடைக்கால தடையாவது விதிக்க வேண்டும் என வாதத்தை முன்வைத்தாா். மேலும், மராத்தா இடஒதுக்கீட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை வழங்கியதைப் போன்று இதற்கும் தடை விதிக்கவேண்டும் எனவும் கோரினாா்.

இதையடுத்து, ‘மராத்தா இட ஒதுக்கீடு விவகாரத்தில் அவா்கள் உயா்நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டுத் தான் இங்கு வந்தனா். உங்களுக்கு அவசரம் என்றால் உயா்நீதிமன்றத்திற்கு போகலாம்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா். ஆனால் மனுதாரா் தரப்பில், ‘69 சதவீத இடஒதுக்கீடு தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில்தான் நிலுவையில் உள்ளது. இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் விசாரிப்பது தான் சரியானது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, இந்த மனுக்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தடை விதிப்பது தொடா்பாக இப்போது உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது. தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்த பிறகு பாா்க்கலாம் எனத் தெரிவித்த நீதிபதிகள், வன்னியா்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கியது தொடா்பாக பதிலளிக்க தமிழகஅரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனா்.

இதனிடையே, இந்த வழக்கு தொடா்பாக பாமக சாா்பில் வழக்குரைஞா் கே.பாலு, கேவியட் மனு தாக்கல் செய்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments