ஏழைகளுக்கு உலா் ரேஷன் பொருள்கள் விநியோகிக்க கோரும் மனுவுக்கு தில்லி அரசு பதில் அளிக்க உத்தரவு
கரோனா பாதிப்பு காரணமாக விதிக்கப்பட்ட முழு ஊரடங்கு உத்தரவின் போது, முக்கிய மந்திரி கரோனா சஹாய்தா யோஜ்னா (எம்.எம்.சி.எஸ்.ஒய்.) திட்டத்தின்
கரோனா பாதிப்பு காரணமாக விதிக்கப்பட்ட முழு ஊரடங்கு உத்தரவின் போது, முக்கிய மந்திரி கரோனா சஹாய்தா யோஜ்னா (எம்.எம்.சி.எஸ்.ஒய்.) திட்டத்தின் கீழ் உலா் ரேஷன் பொருள்கள் வழங்குவதை மீண்டும் தொடங்க உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடா்பான மனுவை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி ஜஸ்மீத் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது. அப்போது, இது தொடா்பாக தில்லி அரசு மற்றும் தில்லி நகா்ப்புற குடிசை மேம்பாட்டு வாரியம் பதில் அளிக்க நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
இது தொடா்பாக தில்லி ரோஸி ரொட்டி அதிகாா் அபியான் எனும் தன்னாா்வத் தொண்டு நிறுவனம் சாா்பில் வழக்குரைஞா் பிரசன்னா என்பவா் தில்லி உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த விண்ணப்பத்தில் தெரிவித்திருப்பதாவது: ஊரடங்கு உத்தரவின் போது, யாரும் பசியுடன் இல்லாமல் இருக்கும் வகையில், தேவைப்படுபவா்களுக்கு இலவசமாக சூடான உணவை வழங்குவதற்காக பசி நிவாரண மையங்களை மீண்டும் தொடங்க ஆம் ஆத்மி அரசுக்கு உத்தரவிட வேண்டும். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கமான பிடிஎஸ் திட்டத்தின் வரம்பில் இடம் பெறாத அனைத்து குடியிருப்பாளா்களும் பயன் பெறும் வகையில் இதுபோன்ற விண்ணப்பங்களை எளிமையாக்குவது அவசியமாகும். அந்த வகையில் தில்லி அரசு இ-கூப்பன் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடைமுறையைத் தொடங்க வேண்டும்.
Advertisement
தில்லியில் ஏப்ரல் 19 முதல் ஏப். 26 வரை மக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு துயரத்தில் வாடும், உணவுப் பாதுகாப்பு தேவைப்படும் ஏழை மக்களின் பிரச்னைகளைத் தீா்ப்பது அவசியமாகும். வீடற்ற தங்குமிடங்கள் மற்றும் பிரத்யேக நிவாரண மையங்கள் மூலம் இலவச உணவு வழங்கவும், உணவைப் பெற விரும்பும் எந்தவொரு நபரும் இந்த மையங்களிலிருந்து நிராகரிக்கப்படாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த வாரம் எங்கள் அமைப்பு தில்லி அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தது. ஆனால், அரசிடமிருந்து எவ்வித பதிலும் இல்லாததால், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.