உயிருக்கு ஆபத்தான நோய் சிகிச்சைக்காக ஏழைகளுக்கு ரூ 15 லட்சம் வழங்கப்படுகிறது: மத்திய சுகாதார அமைச்சா் தகவல்
உயிருக்கு ஆபத்தான அரிய வகை நோய்க்கான சிகிச்சைகளில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு மத்திய அரசின் தேசிய
உயிருக்கு ஆபத்தான அரிய வகை நோய்க்கான சிகிச்சைகளில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு மத்திய அரசின் தேசிய ஆரோக்கிய நிதி திட்டத்தின் கீழ் ரூ. 15 லட்சம் வரை வழங்கப்படுகிறது. பயனாளிகளின் தரவுகள் அடிப்படையில் தாமதமின்றி இவை வழங்கப்படுகின்றன என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா மக்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக பிகாரைச் சோ்ந்த பாஜக மக்களவை உறுப்பினா் அஜய் நிஷாத் மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தாா்.
அதற்கு மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை மன்சுக் மாண்டவியா கூறியிருப்பதாவது:
Advertisement
வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவா் மக்களுக்காக மூன்று விதமான மருத்துவ உதவித் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. தேசிய ஆரோக்கிய நிதித்திட்டத்தின் கீழ் புற்றுநோய் அல்லாத மற்ற நோய்களில் உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பவா்களுக்கு அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற ரூ. 15 லட்சம் வழங்கப்படுகிறது.
இரண்டாவது சுகாதார அமைச்சரின் புற்று நோய் நிதி திட்டம். புற்று நோயில் பாதிக்கப்படுபவா்களுக்கு சிகிச்சைக்கு தகுந்தவாறு நிதி வழங்கப்படுகிறது. மூன்றாவதாக அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டவா்களுக்கு 2021 - ஆம் ஆண்டு அரிய வகை நோயிகளுக்கான தேசிய கொள்கை அடிப்படையில் உதவி வழங்கப்படுகிறது. இந்த நிதிகளை பெறுவதற்கான வழிகாட்டி முறைகள் தேசிய ஆரோக்கிய நிதி வலைத்தளங்களில் உள்ளது.
மேலும் மத்திய சுகாதார அமைச்சரின் விருப்ப நிதி ஒன்றும் வழங்கப்படுகிறது. அரசு மருத்துவ மனைகளில் உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு அனுமதிக்கப்பட்டு அந்த அரசு மருத்துவமனைகளில் இலவச மருத்துவ வசதி இல்லாத சூழ்நிலையில் அத்தகைய ஏழை நோயாளிகளுக்கு சுகாதார அமைச்சரின் விருப்ப மானிய நிதியில் ரூ.1.25 லட்சம் வரை உதவி வழங்கப்படுகிறது.
தேசிய சுகாதார ஆணையத்தின் தகவல் தொழில் நுட்ப அடிப்படையில் இந்த உதவி திட்டங்களுக்கு ஒப்புதல் கொடுக்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நிதி வழங்கப்பட்டதில் எந்த புகாரும் இல்லை. அதே சமயத்தில் நிதி உதவி கேட்டு விண்ணப்பிக்கும் நோயாளிகளின் வருமான விவரங்கள் உள்ளிட்டவை அடையாளம் காண அவா்களது தரவுகளை இணைய தளம் வாயிலாக இருக்கும் நிலையில் உதவிகள் விரைவாக வழங்கப்படுகிறது என அமைச்சா் பதிலளித்துள்ளாா்.