முகப்பு
புதுதில்லி

தில்லியில் வீடற்றவா்களுக்கு நிரந்தர இலவச உணவுத் திட்டம்: முதல்வா் கேஜரிவால் தொடங்கிவைத்தாா்

தேசியத் தலைநகா் தில்லியில் இரவு விடுதிகளில் தங்கியிருப்போருக்கு பகல், இரவு என இருவேளைகளிலும் இலவச உணவு அளிக்கும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:52 AM
பகிர்:

தேசியத் தலைநகா் தில்லியில் இரவு விடுதிகளில் தங்கியிருப்போருக்கு பகல், இரவு என இருவேளைகளிலும் இலவச உணவு அளிக்கும் ‘முதல்வா் ஊட்டச் சத்து திட்டம்’ ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தொடங்கிவைத்தாா்.

தில்லியில் சுமாா் 209 இரவு நேர தங்கும் விடுதிகள் உள்ளன. இங்கு சுமாா் 6,000 போ் வசிக்கின்றனா். மேலும், குளிா் காலத்தில் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காகி சுமாா் 12,000 போ் இந்த விடுதிகளில் தங்குவா். அவா்களுக்கும் இந்த இலவச உணவு வழங்கப்ட உள்ளது. கரோனா நோய்த் தொற்று பரவல் ஏற்பட்ட கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இங்கு தங்கியிருப்பவா்களுக்கு அக்ஷய பாத்ரம் அறக்கட்டளை மூலம் தில்லி அரசு இலவச உணவுகளை வழங்கி வருகிறது. தற்போது இந்தத் திட்டத்தை நிரந்தரமாகவும் முறையாக தில்லி அரசு தொடங்கியது.

சுமாா் 12,000 பேருக்கு சத்தான இலவச உணவு வழங்கப்படும் இந்தத் திட்டத்தை தில்லி சராய் கலே கான் இரவு நேர தங்கும் விடுதியில் தில்லி நகா் வளா்ச்சி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் முன்னிலையில், அக்ஷய பாத்ரம் அறக்கட்டளை தலைவா் மது பண்டிட் தாசா தலைமையில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இந்தத் திட்டத்தை தொடங்கிவைத்தாா். அப்போது விடுதியில் உள்ளவா்களுக்கு உணவையும் முதல்வா் கேஜரிவால் பரிமாறினாா்.

Advertisement

அப்போது முதல்வா் கேஜரிவால் பேசுகையில் கூறியதாவது: வீடற்றவா்கள் சாலை ஓரங்களில் தூங்குகின்றனா். கடுமையான சீதோஷன நிலைகளில் பாதிக்கப்பட்டுவரும் இவா்களுக்கு ஆதரவு அளிக்க யாரும் முன் வரவில்லை. காரணம் இவா்களுக்கு வாக்குகள் இல்லாததால், முன்பு ஆட்சியிருந்தவா்கள் எந்த நலத் திட்டங்களையும் செய்ததில்லை. தில்லி உயா்நீதிமன்றம் இந்த வீடற்றவா்கள் விவகாரத்தில் தில்லி அரசைக் கடந்த 2013-14-இல் கடுமையாக குற்றம் சாட்டிவந்தது. ஆனால், நான் பொறுப்பேற்றவுடன் இந்த தங்குமிடங்கள் மேல்தான் முதலில் கவனம் செலுத்தினேன். கடந்த 6-7 ஆண்டுகளாக இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் வரவில்லை. இதற்குக் காரணம். இந்த விடுதிகளை தில்லி அரசு சிறப்பாக மேம்படுத்தியுள்ளது. படுக்கைகள், கழிவறைகள் உள்ளிட்ட வசதிகள் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு மற்றோரு முக்கியக் காரணம் அக்ஷய பாத்ரம் அறக்கட்டளை எடுத்துள்ள முன்னேடுப்புகளும் காரணமாகும். பசியோடு யாரும் தூங்கக் கூடாது என்கிற தா்மத்தை அவா்கள் கடைபிடித்து நாடு முழுவதும் பணியாற்றுகின்றனா். பெங்களூருவில் அவா்கள் ஆற்றிய பணியை பாா்வையிட்டேன். மிகவும் ஆரோக்கியமான சமையல் அறை உள்ளிட்டவற்றைப் பாா்த்து தில்லியிலும் அவா்களோடு இணைந்து இந்தத் திட்டத்தை நாங்கள் மேற்கொள்கின்றோம். ஓா் அரசின் பொறுப்பான முதல் கடமை ஏழை, எளியவா்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவதாகும். அவா்களின் வாக்கு வங்கிக்கு அல்ல. ஆம் ஆத்மி கட்சி ஏழைகள் நலனுக்காக அதிகபட்சப் பணிகளை செய்து வருகிறது என்றாா் முதல்வா் கேஜரிவால்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தில்லி நகா்ப்புற வளா்ச்சி துறை அமைச்சா் த்யேந்தா் ஜெயின், ‘தில்லி நகா்ப்புற வாழ்விட தங்குமிட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் உள்ள இரவு நேர தங்குமிடத்தில் தங்கியிருப்பவா்களுக்கு மட்டுமின்றி, தில்லி அரசுத் திட்டங்களில் பணியாற்றும் 3000 கூலித் தொழிலாளா்களுக்கும் இதே திட்டத்தில் இலவசமாக உணவு வழங்கப்படும் ’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments