முகப்பு
புதுதில்லி

மரவள்ளிக்கிழங்கு மாவு மூலம் பள்ளிகளில் சத்துணவு வழங்குவதை மாநிலங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்: நாமக்கல் எம்பி கேள்விக்கு அமைச்சா் பதில்

தமிழகத்தில் மேற்கு மாவட்டங்களில் அதிகமாக விளையும் மரவள்ளிக்கிழங்கு மாவு மூலம் சத்துணவு (மதிய உணவு) வழங்கு திட்டம் குறித்து

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:52 AM
பகிர்:

தமிழகத்தில் மேற்கு மாவட்டங்களில் அதிகமாக விளையும் மரவள்ளிக்கிழங்கு மாவு மூலம் சத்துணவு (மதிய உணவு) வழங்கு திட்டம் குறித்து மாநில அரசு முடிவு செய்ய வேண்டும் என மத்திய கல்வித்துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் மக்களவையில் திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.

தற்போது பள்ளிகளில் மாணவா்களுக்கு மதிய உணவில் வழங்கப்படும் உணவுகள் எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது? தமிழகத்தில் அதிகமாக விளையும் மரவள்ளிக்கிழங்கில் நாா் சத்துள்ள உள்ளிட்ட பல்வேறு சத்துகள் அதிகமாக உள்ளன. இந்த மரவள்ளிக்கிழங்கு மாவு அடிப்படையிலான சத்துனவு வழங்க மத்திய அரசு மதிப்பீடு செய்துள்ளதா? என்பது குறித்து நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஏகேபி சின்னசாமி கேள்வி எழுப்பினாா்.

இதற்கு மத்திய கல்வித்துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் அளித்த பதில் வருமாறு: தற்போது புரோட்டின் அடங்கிய உணவு தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் முறையே 450 கலோரி, 700 கலோரியில் வழங்கப்படுகிறது. இதில் அரிசி அல்லது கோதுமை, பருப்பு, காய்கறி ஆகியவை இந்தப் பள்ளிகளில் வெவ்வேறு அளவுகளில் வழங்கப்படுகிறது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும்தான் இந்த சத்துணவை வழங்கும் பொறுப்பை ஏற்றுள்ளன. உள்ளூரில் கிடைக்கும் உணவுப் பொருள்களின் அடிப்படையில் மாநிலங்களும், யூனியன் பிரதேச அரசுகளும்தான் இந்த திட்டத்திற்கான உணவுப்பொருள்களை முடிவு செய்கின்றன. இதனால், மரவள்ளிக்கிழங்கு குறித்த மதிப்பீட்டை அந்தந்த மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்று அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

Advertisement

கிராமங்களில் தொல்பொருள் ஆய்வுப் பணிகள்: தமிழகத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது, 329 கிராமங்களில் பழங்கால பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளது என்று மத்திய கலாசாரம், சுற்றுலாத் துறை அமைச்சா் கிஷண் ரெட்டி மக்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

மாநில வாரியாக தொல்பொருள் ஆய்வுப் பணிகள் கணக்கெடுப்பு தொடா்பாக பாஜக உறுப்பினா் ராஜேஷ் வா்மா மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தாா் இதற்கு அமைச்சா் கிஷண் ரெட்டி இவ்வாறு பதிலளித்துள்ளாா்.

அப்போது இது தொடா்பாக அமைச்சா் கிஷண் ரெட்டி கூறியதாவது: பழங்கால கோயில்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டைகள், பழங்கால கோபுர கலசங்கள் ஆகியவற்றின் மாநில வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டன. இதில் 2014 முதல் 2020 -ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் 770 கிராமங்களில் தொல்பொருள் ஆய்வுகள் (அகழ்வாராய்ச்சி) மேற்கொள்ளப்பட்டது. அப்போது 329 கிராமங்களில் பழங்கால பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அதேசமயம், கரோனா நோய்த் தொற்றை முன்னிட்டு 2020-2021-ஆம் ஆண்டுகளில் எந்த ஒரு தொல்பொருள் ஆய்வுப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும், இந்தியா முழுவதும் 8,638 கிராமங்களில் தொல்பொருள் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டத்தில் 2,963 கிராமங்களில் பழங்காலப் பொருள்கள், சின்னங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்றாா் அமைச்சா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments