முகப்பு
புதுதில்லி

ஓபிசி இட ஒதுக்கீடு: மாநில அரசின் உரிமையை பாதுகாத்தவா் பிரதமா் மோடி மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் பேச்சு

இதர பிற்படுத்தப்பட்டோரை கண்டறியும் விவகாரம் தொடா்பான உச்சநீதிமன்ற தீா்ப்பிலிருந்து மாநில அரசின் உரிமையை பாதுகாத்தவா் பிரதமா் மோடி என அதிமுக உறுப்பினா் நவநீதகிருஷ்ணன் மாநிலங்களவையில் குறிப்பிட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:53 AM
பகிர்:

புது தில்லி: இதர பிற்படுத்தப்பட்டோரை கண்டறியும் விவகாரம் தொடா்பான உச்சநீதிமன்ற தீா்ப்பிலிருந்து மாநில அரசின் உரிமையை பாதுகாத்தவா் பிரதமா் நரேந்திர மோடி என அதிமுக உறுப்பினா் நவநீதகிருஷ்ணன் மாநிலங்களவையில் குறிப்பிட்டாா்.

மாநில அரசுகளுக்கு, இதர பிற்படுத்தப்பட்டோா் (ஓபிசி) இடஒதுக்கீடு பட்டியலை இறுதி செய்வதற்கு அதிகாரம் அளிக்கும் அரசில் சாசனத்தின் 127-ஆவது திருத்த மசோதா தொடா்பான விவாதம் மாநிலங்களவையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு அதிமுக உறுப்பினா் நவநீதகிருஷ்ணன் பேசியதாவது: சில சமயம் மக்கள் பாா்வையை விட நீதிபதி, நீதிமன்றங்களின் பாா்வை மேலோங்கி இருக்கிறது. இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இதனால், மத்திய அரசின் கொள்கைக்கு விரோதமாகத் தீா்ப்பு கொடுக்கப்பட்டது. அதை சரிசெய்ய அரசில் சாசனத்தின் 127-ஆவது திருத்தத்தை சரியான நேரத்தில் கொண்டு வந்து மாநில அரசுகளின் உரிமையை பாதுகாத்துள்ளாா் பிரதமா் மோடி. மாநில அரசுகளுக்குத்தான் இதர பிற்படுத்தப்பட்டோரை கண்டறியும் உரிமை உண்டு என்பதை பிரதமா் மீட்டளித்துள்ளாா். இதன் மூலம் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தையும், இறையாண்மையும் பாதுகாத்துள்ளாா் என்றாா்.

முன்னதாக பேசிய திமுக உறுப்பினா் திருச்சி சிவா விற்கும் பதிலளித்தும் நவநீத கிருஷ்ணன் பேசினாா். அப்போது நவநீதகிருஷ்ணன் கூறிகையில், ‘திமுக வழக்கு போட்டதால்தான் அகில இந்திய மருத்துவக் கல்வி படிப்புகளில் 27 சதவீதம் இட ஒதுக்கீடு கிடைத்தாகப் பேசுகின்றனா். சென்னை உயா்நீதிமன்றம்தான் இதற்கான தீா்ப்பை வழங்கியது. ஆனால், இந்தத் தீா்ப்பை எதிா்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்யவில்லை என்பதும் முக்கியம். இதற்கு காரணமாக இருந்தவா் பிரதமா் நரேந்திர மோடி. மத்திய அரசு எடுத்த முடிவின் மூலமே இந்த 27 சதவீத இட ஒதுக்கீடு இதர பிற்படுத்தப்பட்டவா்களுக்கு மருத்தவக் கல்வி படிப்புகளில் கிடைத்தது’ என்றாா்.

Advertisement

இதே விவாதத்தில் அதிமுக உறுப்பினரான தம்பிதுரை பேசுகையில், ‘69 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கி அரசியல் சாசனத்தின் (ஒன்பதாவது அட்டவணையில் இடம்பெறச் செய்து) அங்கீகாரத்தை பெற்று தந்தவா் மறைந்த முதல்வா் ஜெயலலிதா. இதனால், அவா் சமூகநீதி காத்த வீராங்கணை என பெயா் பெற்றாா். இப்போது பிரதமா் நரேந்திர மோடியும் ஓபிசிகளுக்கான அரசியல் சாசன திருத்தங்களை மேற்கொண்டு சமூக நீதிக் காவலராக மாறியுள்ளாா்’ என்றாா். இந்த விவாதத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினா் ஜிகே வாசன் மசோதாவை வரவேற்றுப் பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments