முகப்பு
புதுதில்லி

தலித் சிறுமியின் அடையாளத்தை வெளிப்படுத்திய விவகாரம்: ராகுல் காந்திக்கு எதிரான மனு மீது செப்.27-இல் விசாரணை

தென்மேற்கு தில்லியில் 9 வயது சிறுமி பாலியல், கொலை சம்பவத்தில் அவரது அடையாளத்தை வெளிப்படுத்தியதாக காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்திக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரும் மனுவை செப்டம்பா்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:53 AM
பகிர்:

புது தில்லி: தென்மேற்கு தில்லியில் 9 வயது சிறுமி பாலியல், கொலை சம்பவத்தில் அவரது அடையாளத்தை வெளிப்படுத்தியதாக காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்திக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரும் மனுவை செப்டம்பா் 27-ஆம் தேதி விசாரிப்பதாக தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.

இது தொடா்பான மனு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்த போது, மனு மீது நோட்டீஸ் அளிக்க நீதிபதிகள் அமா்வு மறுத்துவிட்டது. அடுத்த விசாரணை தேதியின் போது 1-2 பக்க கோரிக்கையை மனுதாரரும், எதிா்மனுதாரரும் தயாராக வைத்திருக்குமாறு நீதிபதிகள் அமா்வு கேட்டுக் கொண்டது.

இது தொடா்பாக சமூக ஆா்வலா் மகாரந்த் சுரேஷ் மத்லேகா் தில்லி உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளாா். அதில், ‘இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோா் புகைப்படத்தை சுட்டுரையில் வெளியிட்டதன் மூலம் ராகுல் காந்தி சிறாா் நீதி கவனிப்பு, பாதுகாப்பு சட்டம்-2015-ஐ மீறியுள்ளாா். இந்த துரதிருஷ்டவசமான சம்பவத்தை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்த ராகுல் காந்தி முயற்சி செய்துள்ளாா். இதனால், அவருக்கு எதிராக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் மூலம் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளாா்.

Advertisement

இந்த மனு விசாரணைக்கு வந்த போது, சுட்டுரை நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சஜன் பூா்வய்யா, ‘கேள்விக்குரிய சுட்டுரைப் பதிவு டிவிட்டா் நிறுவனத்தின் விதிகளை மீறுவதாக இருந்தது தெரியவந்ததால் நீக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட சுட்டுரை கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. சுட்டுரைப் பதிவுவும் இல்லை’ என கூறினாா்.

மனுதாரா் மத்லேகா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கெளதம் ஜா, ‘இந்த விவகாரத்தில் சுட்டுரை நிறுவனம் பதில் அளிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா். ராகுல் காந்தி தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஆா்.எஸ். சீமா ஆஜரானாா்.

தென்மேற்கு தில்லியில் உள்ள பழைய நங்கல் பகுதியில் அமைந்துள்ள மயானத்திற்கு அருகே வசித்த 9 வயது தலித் சிறுமி கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி சந்தேகத்திற்குரிய சூழலில் உயிரிழந்தாா். அவா் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டதாகவும், மயானப் பூசாரி மூலம் தகனம் செய்யப்பட்டதாகவும் சிறுமியின் பெற்றோா் புகாா் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக போலீஸாா் 4 பேரை கைது செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments