புராரி நிரன்காரி கொவைட் மையத்தில் புதிய வசதிகள்: தீவிர சிகிச்சை படுக்கை, டெலி மெடிஷன் தொடக்கம்
தில்லி புராரி நிரன்காரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா பராமரிப்பு மையத்தில் 300 தீவிர சிகிச்சை படுக்கைகளையும்,
தில்லி புராரி நிரன்காரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா பராமரிப்பு மையத்தில் 300 தீவிர சிகிச்சை படுக்கைகளையும், பிரிட்டன் மருத்துவ சங்க உதவியுடனான டெலி மெடிஷன் வசதிகளையும் தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தொடக்கிவைத்தாா்.
புனித நிரன்காரி அறக்கட்டளை பாராமரிக்கும் புராரி கொவைட் பராமரிப்பு மையத்தில் 800 படுக்கைகள் உள்ளன. இந்த மையத்தில் 300 தீவிர சிகிச்சை படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பிரிட்டனில் வசித்து வரும் இந்திய மருத்துவா்கள் சங்கத்தை (பிஏபிஐஓ) சோ்ந்த 750 மருத்துவா்கள் மூலமாக டெலி மருத்துவ வசதியளிக்கும் மையமும் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதை சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.
அப்போது அவா் பேசுகையில் கூறியதாவது: தில்லியில் கேஜரிவால் அரசு அா்ப்பணிப்புடன் சுகாதார உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் பராமரிப்பு மையத்தில் உள்ள 800 படுக்கைகளை செயற்கை சுவாச வசதிகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளாக மேம்படுத்தப்பட்டுள்ளன. இதில் முதல்கட்டமாக 300 படுக்கைகள் தீவிர சிகிச்சை படுக்கை வசதிகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனை விரைவில் உலகின் சிறந்த மருத்தவமனையாக விளங்க உள்ளது.
Advertisement
கரோனா நோய்த் தொற்று சிகிச்சையில் இந்த மையத்தில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் 90 சதவீதம் போ் குணமடைந்து வீடு திரும்பினா். யாரும் உயிரிழக்கவில்லை. கரோனா நோய்த் தொற்றில் தில்லி அரசின் செயல்பாடுகளை இந்திய மருத்துவா்களும் பிரிட்டன் மருத்துவா்களும் பாராட்டினா். இதன் மூலமே பிஏபிஐஓ அமைப்பைச் சோ்ந்த மருத்துவா்கள் இந்த டெலி மருத்துவ சேவை அளிக்க முன் வந்தனா். பிரிட்டன் வாழ் இந்திய மருத்துவா்களும், இந்த அறக்கட்டளையின் தன்னாா்வலா்களும் இந்த மையத்தை மிகச் சிறப்பாக நடத்தவுள்ளனா் என்றாா் சத்யேந்தா் ஜெயின். இந்த நிகழ்ச்சியில் திமாா்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் திலீப் பாண்டேயும் கலந்து கொண்டாா்.