முகப்பு
புதுதில்லி

வடகிழக்கு தில்லி வன்முறைச் சம்பவம் வழக்கு ஜோடிக்கப்பட்டது: உமா் காலித் தரப்பில் வாதம்

வட கிழக்கு தில்லி வன்முறை சதித் திட்ட வழக்கில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:59 AM
பகிர்:

வட கிழக்கு தில்லி வன்முறை சதித் திட்ட வழக்கில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவா் தலைவா் உமா் காலித் மீது போலீஸாா் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியிருப்பதாக அவரது தரப்பில் தில்லி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை வாதம் முன்வைக்கப்பட்டது.

இது தொடா்பான மனு கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அமிதாப் ராவத் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது உமா் காலித் தரப்பில் வழக்குரைஞா் திரிதீப் பைஸ் முன்வைத்த வாதம்: இந்த வழக்கை பொருத்தமட்டில், உமா் காலித் மீது போலீஸாா் முன்வைத்த குற்றச்சாட்டுகளில் முரண்பாடுகள் உள்ளன. இது திட்டமிட்டு போடப்பட்ட பொய் வழக்காகும். மேலும், தனது உரையில் உமா் காலித் வன்முறையைத் தூண்டும் வகையில் ஏதும் பேசவில்லை. சொல்லப்போனால், அவரது உரையில் காந்தியின் வழியில் ஒற்றுமையை வலியுறுத்தும் பேச்சுகள்தான் இடம்பெற்றிருந்தன. ஆனால், இதை போலீஸாா் பயங்கரவாதமாக சித்தரித்துள்ளனா். ஜனநாயகத்தின் அதிகாரம் குறித்தும், காந்தியை சுட்டிக் காட்டியும்தான் உமா் காலித் பேசியுள்ளாா்.

முன்னாள் அமெரிக்க அதிபா் டொனால்டு டிரம்ப் வருகையின் போது வன்முறையை ஏற்படுத்த ஜனவரி 8-ஆம் தேதி உமா் காலித் பிற நபா்களுடன் சோ்ந்து சதித் திட்டம் கூறியதாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். ஆனால், அதிபரின் வருகை குறித்த செய்தி பிப்ரவரியில்தான் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டது என்பது தெளிவாகும் என்று அவா் வாதிட்டாா்.

Advertisement

இந்த மனு மீது தில்லி காவல் துறை தரப்பில் அண்மையில் தெரிவித்த பதிலில் இந்த ஜாமீன் மனு தகுதியைக் கொண்டிருக்கவில்லை. இதனால், தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தனா். சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்ட வழக்கில் உமா் காலித் மற்றும் இதர பலா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வட கிழக்கு தில்லி வன்முறையில் இவா்கள் முக்கிய மூளையாக செயல்பட்டதாக போலீஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வன்முறைச் சம்பவத்தில் 53 போ் கொல்லப்பட்டனா். 700-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். ஜாமியா மிலியா இஸ்லாமியா மாணவா் ஆசிஃப் இக்பால் தன்கா, ஜேஎன்யு மாணவா்கள் நடாஷா நா்வால், தேவாங்கனா கலிதா, ஜாமியா ஒருங்கிணைப்பு குழு உறுப்பினா்கள் சபூரா ஜா்கா், முன்னாள் ஆம் ஆத்மி கவுன்சிலா் தாஹிா் உசேன் மற்றும் பலா் மீது யுஏபிஏ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த ஏப்ரலில் உமா் காலித்திற்கு ஒரு வழக்கில் நீதின்றம் ஜாமீன் அளித்திருந்தது. அண்மையில் தில்லி உயா்நீதிமன்றம் ஆசிஃப், நா்வால் மற்றும் கலிதாவுக்கு இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments