டிரம்ப் 48 மணிநேரக் கெடு! நிராகரித்த ஈரான்!
அமெரிக்கா - ஈரான் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ள டிரம்ப் விடுத்த காலக்கெடுவை நிராகரித்த ஈரான் குறித்து...
அமெரிக்கா - ஈரான் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ள டிரம்ப் விடுத்த 48 மணிநேர காலக்கெடுவை ஈரானின் மத்திய ராணுவ தலைமையகம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.05) நிராகரித்துள்ளது.
ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய போர் ஒரு முடிவை எட்டாமல் இருபக்கமும் தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இதனால், உலகின் பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளவும், ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கவும் ஈரானுக்கு டிரம்ப் 10 நாள்கள் அவகாசம் கொடுத்திருந்தார். அந்த அவகாசம் முடிவடையப்போகும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையை 48 மணிநேரத்தில் திறக்காவிட்டால் ஈரான் மீது நரகம் கட்டவிழ்த்து விடப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்தார்.
Advertisement
இதுகுறித்து, ஈரானின் மத்திய ராணுவ தலைமையகத்திலிருந்து வெளியிட்ட ஓர் அறிக்கையில், ஜெனரல் அலி அப்தொல்லாஹி அலியாபாதி, “டிரம்பின் அச்சுறுத்தல் என்பது ஒரு பயனற்ற, பதற்றமான, நிலையற்ற மற்றும் முட்டாள்தனமான செயல்" எனத் தெரிவித்தார்.
மேலும், ஹோர்முஸ் நீரிணையை 48 மணிநேரத்தில் திறக்காவிட்டால் ஈரான் மீது நரகம் கட்டவிழ்த்து விடப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவிட்டதற்கு பதில் கூறும் விதமாக, “உங்களுக்காக (டிரம்ப்) நரகத்தின் வாயில் திறக்கப்படும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், குவைத் நாட்டின் பல்வேறு அமைச்சகங்கள் அடங்கிய அந்நாட்டு அரசு வளாகத்தின் மீது ஞாயிற்றுக்கிழமை (ஏப்.05) ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.