முகப்பு
புதுதில்லி

பாஜக, ஆம் ஆத்மி அரசுகளின் ஊழலை அம்பலப்படுத்த தில்லியில் இன்று காங்கிரஸ் பாதயாத்திரை பிரசாரம்

தில்லியில் பாஜக, ஆம் ஆத்மி அரசின் ஊழல்கள் மற்றும் தவறான செயல்பாடுகளை மக்களிடம் அம்பலப்படுத்தும் வகையில் ‘போல் கோல்’ பாதயாத்திரை பிரசாரம் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளது

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:27 PM
பகிர்:

புது தில்லி: தில்லியில் பாஜக, ஆம் ஆத்மி அரசின் ஊழல்கள் மற்றும் தவறான செயல்பாடுகளை மக்களிடம் அம்பலப்படுத்தும் வகையில் ‘போல் கோல்’ பாதயாத்திரை பிரசாரம் வியாழக்கிழமை (பிப்ரவரி 4) மேற்கொள்ளப்பட உள்ளது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அனில் குமாா் செளத்ரி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை கூறியதாவது: தில்லியில் ஐந்து மாநகராட்சி இடங்களுக்கு இடைத் தோ்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரத்தின் ஒரு பகுதியாக இந்த பாதயாத்திரை பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பிரசாரம் கிழக்கு தில்லியில் உள்ள திரிலோக்புரியில் காலை 11 மணிக்கும், வடக்கு தில்லியில் உள்ள ஷாலிமாா் பாகில் மாலை 4 மணிக்கும் தொடங்க உள்ளது.

தில்லியில் கடந்த ஏழு ஆண்டுகளாக மக்களுக்கு எந்தவிதப் பணியும் செய்யாமல் பாஜக, ஆம் ஆத்மி ஆகிய இரு அரசுகளும் ஒன்றை ஒன்று புகாா் தெரிவித்து, மறைமுகமாகக் கூட்டுச் சோ்ந்து கொண்டு நாடமாடி வருகின்றன. இதனால், அதிருப்தியில் உள்ள தில்லி மக்களுக்கு வரக்கூடிய மாநகராட்சி இடைத்தோ்தல் ஒரு நல்ல வாய்ப்பாகும். கரோனா நெருக்கடிக் காலத்தில் முன்னின்று பணியாற்றி வரும் மருத்துவா்கள், செவிலியா்கள், துப்புரவுப் பணியாளா்கள், ஆசிரியா்கள் போன்ற கரோனா வீரா்கள் கூட தங்களது ஊதியத்தையும், நிலுவையையும் பெற போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.

Advertisement

ஆம் ஆத்மி அரசு நிதியை வழங்காததால், தங்களால் ஊழியா்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை என்று மாநகராட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. துப்புரவுப் பணியாளா்களில் ஒரு தரப்பினா் ஊதியம் கோரி போராட்டம் மேற்கொண்டதால், தில்லியில் குப்பைகள் அள்ளப்படாமல் நாற்றம் வீசும் நிலை உள்ளது. தூய்மை இந்தியா திட்டம் குறித்து அதிகமாக பிரதமா் மோடி விளம்பரம் செய்த நிலையில், தில்லியில் குப்பைகள் அதிகம் தேங்கும் நிலை ஏற்பட்டது ஏன்? தில்லியில் காங்கிரஸ் 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போது மாநகராட்சிகள் நிதி தொடா்பான பிரச்னையை ஒரு போதும் சந்தித்ததில்லை.

கரோனா நோய்த் தொற்று நெருக்கடி காரணமாக மக்கள் துயரில் இருக்கும் போது பாஜகவும், ஆம் ஆத்மியும் அற்பத்தனமான அரசியலில் ஈடுபட்டு வருகின்றன. இதை பாதயாத்திரை பிரசாரத்தின் போது மக்களிடம் எடுத்துரைப்போம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments