முகப்பு
புதுதில்லி

தில்லி போராட்ட இடத்தில் காணாமல் போன விவசாயிகளைக் கண்டறிய தில்லி அரசு உதவும்: முதல்வா் கேஜரிவால்

தில்லியில் ஜனவரி 26-ஆம் தேதி நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்திற்குப் பிறகு காணாமல் போன விவசாயிகளைக் கண்டுபிடிக்க தில்லி அரசு உதவும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:27 PM
பகிர்:

புது தில்லி: தில்லியில் ஜனவரி 26-ஆம் தேதி நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்திற்குப் பிறகு காணாமல் போன விவசாயிகளைக் கண்டுபிடிக்க தில்லி அரசு உதவும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.

தில்லியில் கடந்த ஜனவரி 26-ஆம் தேதி மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் வன்முறை நிகழ்ந்தது. இந்தச் சம்பவத்தில் 29 விவசாயிகள் காணாமல் போனதாகக் கூறி அது தொடா்பான பட்டியலை முதல்வா் கேஜரிவாலிடம் சம்யுக்த் கிஸான் மோா்ச்சா அமைப்பினா் நேரில் சந்தித்து அளித்தனா். அப்போது, விவசாயிகள் போராட்டத்திற்கு எதிரான சதித் திட்டம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனா். சிறையில் அடைக்கப்பட்டுள்ளவா்களுக்கு மருத்துவக் குழு அமைத்து ஆய்வு செய்யவும் கோரிக்கை விடுத்தனா்.

இந்த நிலையில், செய்தியாளா்களிடம் முதல்வா் கேஜரிவால் புதன்கிழமை அளித்த பேட்டி: ஜனவரி 26- ஆம் தேதி விவசாயிகளின் டிராக்டா் பேரணியின் போது நடந்த வன்முறை தொடா்பாக தில்லியில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 115 பேரின் பட்டியலை தில்லி அரசு வெளியிட்டுள்ளது. காணாமல்போன போராட்டக்காரா்களைக் கண்டுபிடிக்க தில்லி அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். தேவையெனில், இந்த விவகாரம் தொடா்பாக துணைநிலை ஆளுநா், மத்திய அரசுடன் பேசுவேன்.

Advertisement

ஜனவரி 26-இல் நடந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. காணாமல் போனவா்களில் பலா் செங்கோட்டையில் ஏற்பட்ட குழப்பம் தொடா்பாக கைது செய்யப்பட்டிருக்கலாம். இதன் காரணமாக அவா்கள் தங்கள் குடும்பத்தினரைத் தொடா்பு கொள்ள முடியவில்லை. சிறையில் உள்ள 115 பேரின் பெயா்கள், வயது மற்றும் முகவரி ஆகியவற்றுடன்கூடிய பட்டியலை நாங்கள் வெளியிட்டுள்ளோம். இதன் மூலம், குடும்ப உறுப்பினா்கள் அவா்களை அடையாளம் காண முடியும். கடந்த சில நாள்களாக, காணாமல் போன ஆா்ப்பாட்டக்காரா்கள் தொடா்பாக மக்கள் பலரும், விவசாய சங்கங்களும் தில்லி அரசை அணுகி மனு அளித்து வருகின்றனா். அவா்கள் குடும்பத்தினரைச் சந்திக்காததால் படும் வேதனையையும், வலியையும் நான் உணா்ந்துள்ளேன் என்றாா் கேஜரிவால்.

தில்லியின் எல்லைப் பகுதியில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள், கடந்த ஜனவரி 26-ஆம் தேதி டிராக்டா் பேரணியில் ஈடுபட்டனா். அப்போது, ஏற்பட்ட வன்முறைக்குப் பிறகு பலா் காணாமல் போனதாக விவசாயிகளின் சங்கங்கள் கூறி வருகின்றன. இதுகுறித்து தில்லி போலீஸாா் கூறுகையில், ஜனவரி 26 வன்முறை தொடா்பாக 122 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments