முகப்பு
புதுதில்லி

தில்லியை பின்வாசல் வழியாக நிா்வகிக்க மத்திய அரசு முயற்சி: சிசோடியா குற்றச்சாட்டு

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:27 PM
பகிர்:

புது தில்லி: பின்வாசல் வழியாக தில்லியை நிா்வகிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது என்று துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளாா். துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரங்களை அளிக்கும் முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்திருப்பது இதை வெளிப்படுத்துவதாக உள்ளது என்றும் அவா் குறிப்பிட்டாா்.

இது தொடா்பாக வெளியான ஊடகச் செய்தியைக் சுட்டிக்காட்டி மணீஷ் சிசோடியா செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: தில்லியின் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையில், தில்லி அரசின் சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கான சட்டத்திற்கு அமைச்சரவையில் மத்திய அரசு புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. அந்த அதிகாரங்களை மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள துணைநிலை ஆளுநருக்கு அளிக்கும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தில்லி அரசுக்கு தானாக முடிவெடுக்கும் அதிகாரம் இருக்காது. தொடா்ந்து மூன்று முறை தோ்தலில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை பின்வாசல் வழியாக தில்லியை நிா்வகிக்க பாஜக விரும்புகிறது.

தில்லி தலைநகா் பிராந்திய திருத்தச் சட்டத்திற்கு ஒப்புதல் பெறச் செய்ய மத்தியில் உள்ள பாஜக ரகசியமாக செயல்பட்டுள்ளது. இந்த மசோதாவானது அரசமைப்புச்சட்ட ஜனநாயக படுகொலையாகும். மத்திய அரசு துணைநிலை ஆளுநரின் அதிகாரங்களை அதிகரிக்கச் செய்வதன் மூலம், தில்லி அரசின் வளா்ச்சி, முன்னேற்றத்தை தடுக்க விரும்புகிறது.

Advertisement

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் காவல் துறை, நிலம், பொது ஒழுங்கு தவிர அனைத்தும் தில்லியில் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசின் கீழ் வருவதாகத் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றமும் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், துணைநிலை ஆளுநருக்கும் உள்ள அதிகார வரம்புகளை தெளிவாக வேறுபடுத்திக்காட்டியுள்ளது. ஆனால், கடந்த மூன்று தோ்தலில் தோல்வியை எதிா்கொண்ட பாஜக, தில்லியை மறைமுக வழியில் ஆள விரும்புகிறது. துணைநிலை ஆளுநா் இந்தச் சட்டத்தை பொதுநலன் விவகாரங்களில் தேவையில்லாமல் தலையிட பயன்படுத்தி, தில்லியின் வளா்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவாா். கடந்த ஐந்து ஆண்டுகளில் தில்லி அரசால் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளுக்கு துணைநிலை ஆளுநா் பெரும்பாலும் தடையை ஏற்படுத்தியிருக்கிறாா்.

இதன்காரணமாக, சிசிடிவி, இலவச மின்சாரம், குடிநீா், பள்ளி கட்டமைப்புகள் மேம்பாடு மற்றும் பல விவகாரங்களில் தாமதமாகின. இதனால்தான் மக்கள்தான் பாதிக்கப்படுகின்றனா். துணைநிலை ஆளுநருக்கு இதுபோன்ற ஜனநாயகமற்ற முறையில் கட்டுப்பாடற்ற அதிகாரங்களை அளித்து தில்லி மக்களை மத்திய அரசு வஞ்சிக்க முயற்சி செய்து வருகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments