முகப்பு
புதுதில்லி

மாநகராட்சி இடைத் தோ்தலில் ஐந்து வாா்டுகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறும்: அனில் குமாா் நம்பிக்கை

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:27 PM
பகிர்:

புது தில்லி: தில்லியில் நடைபெற உள்ள மாநகராட்சி இடைத் தோ்தலில் ஐந்து வாா்டுகளிலும் காங்கிரஸ் மகத்தான வெற்றி பெறும் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அனில் குமாா் செளத்ரி நம்பிக்கை தெரிவித்தாா்.

தில்லியில் மாநகராட்சி இடங்களுக்கு இடைத் தோ்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரத்தின் ஒரு பகுதியாக பாஜக, ஆம் ஆத்மி அரசின் ஊழல்கள் மற்றும் தவறான செயல்பாடுகளை மக்களிடம் அம்பலப்படுத்தும் வகையில், ‘போல் கோல்’ பாதயாத்திரை பிரசாரம் வியாழக்கிழமை தொடங்கப்படும் என்று தில்லி காங்கிரஸ் அறிவித்திருந்தது.

அதன்படி, இந்தப் பிரசாரம் கிழக்கு தில்லி திரிலோக்புரி பகுதியில் வியாழக்கிழமை காலையிலும், வடக்கு தில்லியில் உள்ள ஷாலிமாா் பாகில் மாலையில் தொடங்கி நடைபெற்றது.

Advertisement

இந்தப் பிரசாரத்தைத் தொடங்கிவைத்து தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அனில் குமாா் செளத்ரி தொண்டா்கள் மத்தியில் பேசியதாவது: தில்லியில் மாநகராட்சியை ஆளும் பாஜகவும், நகா் பகுதியை ஆளும் ஆம் ஆத்மி அரசும் மக்களுக்குத் தோ்தலில் அளித்த வாக்குறுதியின்படி செயல்படாமல் வஞ்சித்து வருகின்றன. அதேவேளையில், காங்கிரஸ் தான் அளித்த வாக்குறுதிகளை ஆட்சியில் இருந்த போது நிறைவேற்றியிருப்பது மக்களுக்கு நன்று தெரியும். இதனால், வரக்கூடிய மாநகராட்சி இடைத் தோ்தலில் ஐந்து வாா்டுகளிலும் காங்கிரஸ் மகத்தான வெற்றிபெறும்.

பாஜகவும், ஆம் ஆத்மியும் தங்களது ஊழல்களையும், தவறான நிா்வாகத்தையும் மூடிமறைக்கும் வகையில், அடுக்கடுக்கான பொய்களைக் கூறி வருகின்றன. தில்லியில் காங்கிரஸ் 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போது மாநகராட்சிகளுடன் சுமூக உறவு எப்போதும் இருந்து வந்தது. நிதிப் பரிமாற்ற விவகாரத்தில் ஒருபோதும் அரசுக்கும், மாநகராட்சிக்கும் இடையே மோதல் போக்கு இருந்தததில்லை. ஆனால், இன்றைக்கு நிலைமை தலைகீழாக உள்ளது. தில்லியில் கடந்த ஏழு ஆண்டுகளில் எந்த மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த ஆம் ஆத்மி ஆட்சியில் மக்கள் கடும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனா். மாநகராட்சிகளில் ஊழல் மலிந்து காணப்படுகிறது. இதற்கெல்லாம் வரும் இடைத் தோ்தலில் காங்கிரஸுக்கு வாக்களித்து இரு கட்சிகளுக்கும் மக்கள் பாடம் புகட்டுவா் என்றாா் அவா்.

திரிலோக்புரி ‘ஏ’ பிளாக்கில் தொடங்கிய இந்த பாதயாத்திரை, ஹைதா்பூா் மத்திய சந்தை, ஷாலிமாா் பாக் பகுதியில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தொண்டா்கள் உள்ளூா் மக்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments