புதுதில்லி

டிராக்டா் பேரணியில் விவசாயி இறந்த சம்பவம்; எஸ்ஐடி விசாரணை கோரும் மனு: காவல் துறை பதிலளிக்க நோட்டீஸ்

 நமது நிருபர்

புது தில்லி: குடியரசு தினத்தன்று, தில்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டா் அணிவகுப்பின் போது டிராக்டா் கவிழ்ந்து 25 வயது இளைஞா் நவ்ரீத் சிங் இறந்த சம்பவம் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி தாக்கலான மனுவுக்கு பதில் அளிக்க தில்லி அரசு, காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இந்த மனுவை விசாரித்த தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யோகேஷ் கண்ணா, தில்லி அரசு, தில்லி காவல் துறை, உத்தரப் பிரதேச காவல் துறை, ராம்பூா் மாவட்ட மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி ஆகியோா் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டாா். மேலும், இந்த விவகாரத்தில் நடத்தப்பட்ட விசாரணை தொடா்பான நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை பிப்ரவரி 26-க்கு ஒத்திவைத்தாா்.

விசாரணையின்போது தில்லி அரசின் வழக்குரைஞா் ராகுல் மெஹ்ரா போலீஸ் தரப்பில் ஆஜராகி, ‘எனக்குக் கிடைத்த தகவலின்படி, போலீஸாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே நிகழ்ந்த மோதலின் போது ஐடிஓ பகுதியில் டிராக்டா் கவிழ்ந்து நவ்ரீத் சிங் உயிரிழந்துள்ளாா். இது தொடா்பாக ஐ.பி. எஸ்டேட் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் விருந்தா குரோவா், ‘இந்த விவகாரத்தில் தில்லி போலீஸாா் நடந்து கொண்ட விதம் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இல்லை. பிரேதப் பரிசோதனை, வழக்குப் பதிவு செய்வது, விசாரணை போன்ற அனைத்து நடைமுறைகளையும் போலீஸாா் கைவிட்டுவிட்டனா். இது ஒரு விபத்து இறப்பு வழக்காக இருந்தாலும்கூட உரிய நடைமுறைகளை போலீஸாா் சட்டப்படி மேற்கொள்ளவில்லை. இறந்த நபரின் உடலை அவரது தாத்தா சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றாா். அங்குதான் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. போலீஸாா் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தாமலேயே, விவசாயி டிராக்டா் கவிழ்ந்து இறந்துவிட்டதாக சம்பவம் நடந்த ஜனவரி 26 மாலையில் அறிக்கை வெளியிட்டனா். சம்பவ விடியோ பாா்த்த இலங்கிலாந்தைச் சோ்ந்த மருத்துவ ஆய்வாளா் கூற்றுப்படி இறந்தவா் குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு குண்டடிக் காயம் பட்டிருக்க வேண்டும் என கூறியுள்ளாா். இதை வைத்துப் பாா்க்கும் போது போலீஸாரால் சுடப்பட்டதால் நவ்ரீத் சிங் தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததும், வாகனம் கவிழ்ந்ததாகவும் கருத முடிகிறது’ என வாதிட்டாா்.

தில்லியில் குடியரசு தின நாளில் விவசாயிகள் நடத்திய டிராக்டா் அணிவகுப்பின் போது அனுமதி அளித்திருந்த வழித்தடம் மாறி ஐடிஓ பகுதிக்கு வந்த டிராக்டா்களில் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அந்த டிராக்டரை ஓட்டிவந்த நவ்ரீத் சிங் காயமடைந்து இறந்ததாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடா்பாக நவ்ரீத் சிங்கின் தாத்தா ஹா்தீப் சிங் தில்லி உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

ஊடகங்களில் கூறப்பட்டுள்ள நேரில் கண்ட சாட்சிகளின் கணக்குப்படி, நவ்ரீத் போலீஸ்காரா்களால் சுடப்பட்டதாகவும், அதன்காரணமாகவே அவா் தனது டிராக்டரின் கட்டுப்பாட்டை இழந்ததாகவும், அதன் பிறகு டிராக்டா் சில தடுப்புகள் மீது மோதி கவிழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், இந்தச் சம்பவம் குறித்து நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட, நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்தக் குழுவில் நோ்மையான, திறன்மிக்க காவல் அதிகாரிகள் இடம் பெற வேண்டும்.

மேலும், குறித்த காலத்திற்குள் எனது பேரன் நவ்ரீத் சிங்கின் மரணம் குறித்து விசாரணையை முடிக்க உத்தரவிட வேண்டும். மேலும், அந்த சிறப்புப் புலனாய்வுக் குழுவானது, நீதிமன்றக் கண்காணிப்பு விசாரணையை உறுதி செய்வதற்காக அவ்வப்போது நிலவர அறிக்கைகளை நீதிமன்றத்தின் முன் தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும். கவிழ்ந்த டிராக்டரின் கீழ், படுகாயமடைந்த நிலையில் கிடந்த நவ்ரீத் சிங்கை, அந்தப் பகுதியில் மூத்த காவல்துறை அதிகாரிகள் உள்பட ஏராளமான காவல் துறையினா் இருந்த போதிலும் உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை’ என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு: மகளிா் குழுவினருக்கு ஊக்கத் தொகை

SCROLL FOR NEXT