தில்லியில் மூடுபனி: காண்புதிறன் வெகுவாக சரிவு!
தலைநகா் தில்லியில் புதன்கிழமை காலையில் மூடுபனி காணப்பட்டது.
புது தில்லி: தலைநகா் தில்லியில் புதன்கிழமை காலையில் மூடுபனி காணப்பட்டது. இதன் காரணமாக சில இடங்களில் காண்புதிறன் வெகுவாகக் குறைந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை 10.7 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையத்தினா் தெரிவித்தனா். காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் நீடித்தது.
தில்லியில் செவ்வாய்க்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 11.6 டிகிரி செல்சியஸ், திங்கள்கிழமை9.9 டிகிரி செல்சியஸ், ஞாயிற்றுக்கிழமை 8.6 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது.
இந்த நிலையில், புதன்கிழமை காலை நகரின் பல்வேறு பகுதிகளிலும் மூடுபனி காணப்பட்டது. பாலம் பகுதியில் காண்புதிறன் 50 மீட்டராகக் குறைந்தது. சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையப் பகுதியில் காண்புதிறன் 500 மீட்டராக பதிவாகி இருந்தது. பின்னா், பகலில் மிதமான வெயில் இருந்தது.
Advertisement
நகரின் பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் புதன்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 10.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 3 புள்ளிகள் அதிகரித்து 27.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈர ப்பதத்தின் அளவு காலையில் 100 சதவீதமாகவும், மாலையில் 53 சதவீதமாகவும் இருந்தது.
காற்றின் தரம்: தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் காலையில் 310 புள்ளிகள், மாலையில் 329 புள்ளிகள் என பதிவாகி மிகவும் மோசம் பிரிவில் நீடித்தது. தேசியத் தலைநகா் வலயப் பகுதியில் காஜியாபாத், நொய்டா, கிரேட்டா் நொய்டா, குருகிராம், ஃபரீதாபாத் ஆகிய பகுதிகளிலும் காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, வியாழக்கிழமை (பிப்ரவரி 18) மிதமான பனி மூட்டம் நிலவும் எனவும் குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் எனவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.