ரூ. 13 ஆயிரம் கோடியில் ஜெய்ப்பூரின் 2 ஆம் கட்ட மெட்ரோ! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
ரூ. 13 ஆயிரம் கோடியில் ஜெய்ப்பூரில் 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் குறித்து...
ஜெய்ப்பூரில், ரூ. 13 ஆயிரம் கோடி மதிப்பிலான 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் ஏற்கெனவே 11.64 கி.மீ. நீளத்துக்கு முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்பட்டு, முக்கிய வர்த்தக மற்றும் குடியிருப்புப் பகுதிகள் உள்பட 11 நிறுத்தங்களுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், புதியதாக ரூ. 13,037.66 கோடி மதிப்பில் வடக்கு - தெற்கு வழித்தடத்தில் சுமார் 41 கி.மீ. தொலைவுக்கு ஜெய்ப்பூரின் 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை (ஏப். 8) அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
Advertisement
இதனைத் தொடர்ந்து, இந்தப் புதிய மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் வரும் 2031 ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் எனவும், இதற்கான செலவில் மத்திய அரசு 50 சதவீதமும் மற்றும் மாநில அரசு 50 சதவீதமும் நிதி ஒதுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜெய்ப்பூரில் 11.64 கி.மீ. தொலைவுக்கு இயக்கப்படும் மெட்ரோ ரயில்களில் நாள்தோறும் 60,000 பேர் பயணிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.