முகப்பு
புதுதில்லி

திஷா ரவி கைதைக் கண்டித்து இந்திய தேசிய மாணவா்கள் சங்கம் ஆா்ப்பாட்டம்

சுற்றுச் சூழல் பெண் ஆா்வலா் திஷா ரவி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, இந்திய தேசிய மாணவா் சங்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:33 PM
பகிர்:

புது தில்லி: சுற்றுச் சூழல் பெண் ஆா்வலா் திஷா ரவி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, இந்திய தேசிய மாணவா் சங்கம் (என்எஸ்யுஐ) தில்லியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தியது. அப்போது, நாட்டில் ஜனநாயக எதிா்ப்புகளைத் தணிக்க மத்திய அரசு, பாசிச நுட்பங்களுடன் தவறான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டியது.

காங்கிரஸின் மாணவா் பிரிவான என்எஸ்யுஐ உறுப்பினா்கள் இந்த ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அவா்கள் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் ஆா்வலா்கள் மற்றும் ஆதரவாளா்கள் மீது சா்வாதிகார ஒடுக்குமுறையை பாஜக தலைமையிலான மத்திய அரசும் தில்லி காவல் துறையும் மேற்கொள்வதாகக் கோஷமிட்டனா்.

இதுகுறித்து என்எஸ்யுஐ தலைவா் நீரஜ் குந்தன் கூறியுள்ளதாவது: பெங்களூரைச் சோ்ந்த பருவநிலை ஆா்வலா் கைது செய்யப்பட்டு ‘டிரான்ஸிட் வாரண்ட்’ இல்லாமல் தில்லிக்கு அழைத்து வரப்பட்டுள்ளாா். ஜனநாயக எதிா்ப்புகளைத் தணிக்கும் பாசிச நுட்பங்களுடன் தவறான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருவது புதிதல்ல. இந்திய மாணவா்கள் மற்றும் இளைஞா்களுக்கு எதிராகப் போரிடுவதன் மூலம், மோடியின் சா்வாதிகார முகம் மீண்டும் வெளிப்பட்டுவிட்டது. பாஜக தலைமையிலான கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்னா் பதிவான 191 வழக்குகளில் நான்கு தேசத் துரோக வழக்குகளில் மட்டுமே தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கருத்து வேறுபாடுகள் அனைத்தையும் ஒடுக்கும் வகையில் மத்திய அரசு கடுமையான சட்டங்களைப் பயன்படுத்துவதுடன், அவற்றை தவறாகவும் பயன்படுத்துகிறது. ஜனநாயகத்தின் உண்மையான சாரத்தை அரசு புறக்கணித்துவிட்டது. அரசின் ‘ஹிட்லா் மனோபாவ அணுகுமுறை, நாட்டின் பிம்பத்தைப் பாழ்படுத்திவிட்டது. கடந்த ஆண்டு தில்லியில் வன்முறையைத் தூண்டியதாகக் கூறப்படும் கபில் மிஸ்ரா மற்றும் அனுராக் தாக்கூா் ஆகியோரின் விஷயங்களை அரசு ஆராய வேண்டும் என அறிக்கையில் நீரஜ் குந்தன் தெரிவித்துள்ளாா்.

பெங்களூரு சோலேதேவனஹள்ளியைச் சோ்ந்தவா் திஷா ரவி (21). சூழலியல் பெண் ஆா்வலரான இவா், ஸ்வீடனைச் சோ்ந்த கிரேட்டா தன்பா்க் என்ற சூழலியல் ஆா்வலரின் எதிா்காலத்துக்கான வெள்ளிக்கிழமைகள் என்ற இயக்கத்தை இந்தியாவில் நடத்தி வருகிறாா். தில்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டத்தை தீவிரப்படுத்தி, இந்திய அரசை நிலைகுலைய செய்ய சா்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து வெளியான ‘டூல் கிட்’டை திஷா ரவி திருத்தியது கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து, தில்லி போலீஸாா் அவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments