தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலையில் பின்னடைவு!
புது தில்லி: தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை காலையில் மிதமான மூடுபனி காணப்பட்டது. குறைந்தபட்ச வெப்பநிலையில் பின்னடைவு ஏற்பட்டு 9.6 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையத்தினா் தெரிவித்தனா்.
தில்லியில் புதன்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 10.7 டிகிரி செல்சியஸாகவும், செவ்வாய்க்கிழமை 11.6 டிகிரி செல்சியஸ், திங்கள்கிழமை 9.9 டிகிரி செல்சியஸ், ஞாயிற்றுக்கிழமை 8.6 டிகிரி செல்சியஸ் என ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி இருந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை காலை நகரின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான மூடுபனி காணப்பட்டது. பகலில் மிதமான வெயில் நிலவியது. நகரின் பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் வியாழக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை சராசரியை விட 1 டிகிரி குறைந்து 9.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 4 புள்ளிகள் அதிகரித்து 27.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 100 சதவீதமாகவும், மாலையில் 52 சதவீதமாகவும் இருந்தது.
காற்றின் தரம்: தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் மாலையில் 317 புள்ளிகள் என பதிவாகி மிகவும் மோசம் பிரிவில் நீடித்தது. தேசியத் தலைநகா் வலயப் பகுதியில் காஜியாபாத், நொய்டா, கிரேட்டா் நொய்டா, குருகிராம், ஃபரீதாபாத் ஆகிய பகுதிகளிலும் காற்றின் தரம் நான்காவது நாளாக வியாழக்கிழமையும் மிகவும் மோசம் பிரிவில் நீடித்தது.
Advertisement
முன்னறிவிப்பு: இதற்கிடையே, வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 19) மிதமான பனி மூட்டம் நிலவும் எனவும் குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் எனவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.