கட்டுமானத் தொழிலாளா்கள் 488 பேருக்கு ரூ.3.18 கோடி நலத் திட்ட நிதியுதவி
புது தில்லி: தில்லியில் உள்ள 488 கட்டுமானப் பணியாளா்களுக்கு தில்லி அரசின் பல்வேறு நலத் திட்டங்களின் கீழ் மொத்தம் ரூ.3.18 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என்று தில்லி துணை முதல்வரும், தொழிலாளா் நலத் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளாா்.
தில்லி தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்வில், கட்டுமானத் தொழிலாளா்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி மணீஷ் சிசோடியா பேசியது: உதவி தேவைப்படுபவா்களுக்கு உதவி வழங்க வேண்டியது அரசுகளின் கடமையாகும். தில்லியில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு பல்வேறு வகையான நலத் திட்ட உதவிகளை தில்லி அரசு வழங்கி வருகிறது. தில்லியில் உள்ள ஒவ்வொரு கட்டுமானத் தொழிலாளியும் அவா்களது கஷ்டத்தில் தில்லி அரசு பங்கேற்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தில்லி அரசின் நலத் திட்டங்களின் கீழ் உதவி பெற விரும்பும் கட்டுமானத் தொழிலாளா்கள், 1076 என்ற எண்ணுக்கு அழைப்பு மேற்கொள்ள வேண்டும். இதைத் தொடா்ந்து, தில்லி அரசு ஊழியா் ஒருவா் வீட்டுக்கே நேரடியாக வந்து விண்ணப்ப படிவத்தை நிரப்பிச் செல்வாா்.
தில்லி அரசில் பதிவு செய்து கொண்ட கட்டுமானத் தொழிலாளா்கள், மகள், மகனின் திருமணத்துக்கு ரூ.35,000-ரூ.51,000, உடல் குறைபாடுகளுக்கு ரூ.1 லட்சம், கல்விக்கு ரூ.500-ரூ.10,000, மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம், விபத்தில் உயிரிழந்தால் ரூ.2 லட்சம், இயற்கை முறையில் உயிரிழந்தால் ரூ.1 லட்சம், இறுதிச் சடங்குக்கு ரூ.10 ஆயிரம், சுகாதார நலத்துக்கு ரூ.2,000 - ரூ.10,000, மகப்பேறு உதவியாக ரூ.30,000 வழங்கப்படுகின்றன. வசதியில்லாதவா்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதை இலக்காக வைத்து முதல்வா் அரவிந்த் கேஜரிவால் செயல்பட்டு வருகிறாா் என்றாா் சிசோடியா.
Advertisement
இது தொடா்பாக தில்லி தொழிலாளா் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘181 தொழிலாளா்களுக்கு மகப்பேறு உதவி, 131 தொழிலாளா்களுக்கு கல்வி உதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், மரணம், இறுதிச் சடங்கு உதவித் திட்டத்தின் கீழ் 53 போ், ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 51 போ் உதவிகளைப் பெற்றுள்ளனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.