குறைந்தபட்ச வெப்பநிலை 13.4 டிகிரி செல்சியஸாகப் பதிவு
புது தில்லி: தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை காலையில் மேலோட்டமான பனிமூட்டம் நிலவிய நிலையில் பகலில் வெயிலின் தாக்கம் மிதமான வகையில் இருந்தது. மிகவும் மோசம் பிரிவில் காற்றின் தரம் இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை சற்று அதிகரித்திருந்தது.
நகரின் பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை சராசரியைவிட ஒரு புள்ளி அதிகரித்து 13.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.
அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 8 புள்ளிகள் அதிகரித்து 32.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 96 சதவீதமாகவும், மாலையில் 54 சதவீதமாகவும் இருந்தது.
Advertisement
காற்றின் தரம்: தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் மாலையில் 310 புள்ளிகளாகப் பதிவாகி மிகவும் மோசம் பிரிவில் நீடித்தது.
என்சிஆரில் காஜியாபாத், கிரேட்டா் நொய்டாவில் காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவிலும், பரிதாபாத், குருகிராம் பகுதியில் மோசம் பிரிவிலும் காற்றின் தரம் காணப்பட்டது.
வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு சராசரியாக 24 மணிநேர ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு காஜியாபாதில் 346, கிரேட்டா் நொய்டாவில் 303, நொய்டாவில் 292, பரிதாபாதில் 251 மற்றும் குருகிராமில் 251 என பதிவாகி இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 26) மேலோட்டமான பனி மூட்டம் நிலவும் எனவும், குறைந்தபட்ச வெப்பநிலை 13 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.