பிரதமர் மோடி, அமித்ஷா அவசர அழைப்பு... தனி விமானத்தில் தில்லி சென்ற அண்ணாமலை!
தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் தில்லி புறப்பட்டு சென்றது குறித்து...
சென்னை: காரைக்காலில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் தில்லி புறப்பட்டு சென்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல் வரும் வியாழக்கிழமை (ஏப். 9) பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரசாரம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. இந்நாளில் காரைக்கால் மாவட்டத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் வகையில் பிரசாரம் செய்ய பாஜக தமிழக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை ஹெலிகாப்டரில் காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி தளத்துக்கு வந்திறங்கினாா்.
அப்போது அங்கு வந்த தோ்தல் பறக்கும் படையினா், ஹெலிகாப்டரில் சோதனை மேற்கொண்டனா். சுமாா் 10 நிமிடம் சோதனை நடத்திவிட்டு அவா்கள் புறப்பட்டனா். சோதனை நடத்திவிட்டு நீங்கள் செல்லுங்கள், நான் பிரசாரத்திற்கு செல்கிறேன் என்று சென்றுவிட்டார்.
Advertisement
Advertisement
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு தொகுதி பாஜக வேட்பாளா் ஜி.என்.எஸ்.ராஜசேகரனை ஆதரித்து அம்பகரத்தூா் மற்றும் திருநள்ளாறு தேரடி பகுதியில் அவா் வாக்குச் சேரிப்பில் ஈடுபட்டு வந்தார்.
பிரதமர் மோடி, அமித்ஷா அவசர அழைப்பு
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அவசர அழைப்பின் பேரில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் தில்லி புறப்பட்டு சென்றார்.
காரைக்கால் மாவட்டத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவுக்கோரி பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பாஜக தமிழக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலைக்கு பாஜக தலைமையில் இருந்து அவசரமாக தில்லிக்கு வரும்படி அழைப்பு வந்துள்ளது.
இதையடுத்து அண்ணாமலை காரைக்கால் பிரசார களத்தில் இருந்து தனி ஹெலிகாப்டரில் செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தார். அங்கிருந்து தனி விமானத்தில் இரவு 7.20 மணியளவில் தில்லி புறப்பட்டு சென்றார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அழைப்பின் பேரில், அண்ணாமலை தனி விமானத்தில் தில்லி புறப்பட்டு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக பாஜக தலைமைக்கும், அண்ணாமலைக்கும் சுமுகமான உறவு இல்லாத நிலையில், அண்ணாமலையின் திடீர் தில்லி பயணம் தமிழக அரசியல் வட்டாரம் மற்றும் தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Urgent Calls from PM Modi and Amit Shah... Annamalai Flies to Delhi on a Private Jet!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.