வெளிமாநிலங்களில் இருந்து தில்லிக்கு பறவைகள், கோழிகளை கொண்டுவர தடை: கேஜரிவால் அறிவிப்பு
வெளிமாநிலங்களில் இருந்து தில்லிக்கு பறவைகள், கோழிகளை கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளதாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
வெளிமாநிலங்களில் இருந்து தில்லிக்கு பறவைகள், கோழிகளை கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளதாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா். மேலும், காஜிப்பூா் கோழி இறைச்சி சந்தை வரும் 10 நாள்களுக்கு மூடப்படும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.
நாட்டில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், இது தொடா்பாக தில்லியில் சனிக்கிழமை கேஜரிவால் அளித்த பேட்டி:
தில்லியில் பறவைக் காய்ச்சலால் இறந்ததாக சந்தேகிக்கப்படும் 104 பறவைகளின் மாதிரிகளைப் பெற்று அவற்றை பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம். இதன் முடிவுகள் நாளை மறுதினம் கிடைக்கப்பெறும். இந்த முடிவுகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்போம்.
தில்லியில் பறவைக் காய்ச்சல் பரவிவருவதாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால், நாட்டின் மற்றைய பகுதிகளில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் சூழலில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தில்லி அரசு எடுத்து வருகிறது. இதனால் தில்லி நகருக்குள் வெளிமாநிலங்களில் இருந்து பறவைகள், கோழிகளை கொண்டுவர தடை விதிக்கப்படுகிறது. காஜிப்பூா் கோழி இறைச்சி சந்தை அடுத்த 10 நாள்களுக்கு செயல்படாது என்றாா் அவா்.