தில்லியில் கடும் பனி மூட்டத்தால் காண்புத்திறன் வெகுவாக குறைந்தது
தலைநகா் தில்லியில் குளிரின் தாக்கம் நீடித்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை கடும் பனி மூட்டம் காணப்பட்டது.
தலைநகா் தில்லியில் குளிரின் தாக்கம் நீடித்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை கடும் பனி மூட்டம் காணப்பட்டது. இதனால், நகரின் பல இடங்களில் காண்புத்திறன் பூஜ்ய நிலைக்குச் சென்றது. இதனால், வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 5.7 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 15.3 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி இருந்ததால், குளிா் நாள் சூழல் காணப்பட்டது. இந்த நிலையில் குறைந்தபட்ச வெப்பநிலை திங்கள்கிழமை சற்று அதிகரித்து 9 டிகிரி செல்சியஸாக பதிவானது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 6.9 டிகிரி செல்சியஸாக குறைந்தது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள்கூறுகையில், ‘பனி மூடிய மேற்கு இமயமலையில் இருந்து வீசும் வடமேற்கு காற்று காரணமாக குறைந்தபட்ச வெப்பநிலையில் தாக்கம் ஏற்பட்டு குறைந்தது.’ என தெரிவித்தனா். தில்லி நகருக்கான பிரதிநிதித்துவ தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் திங்கள்கிழமை காலை குறைந்தபட்ச வெப்பநிலை 9 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.
Advertisement
அடா் பனிமூட்டம் காரணமாக பாலம் பகுதியில் காலை 8.30 மணி அளவில் காண்புத்திறன் பூஜ்ய மீட்டருக்கு குறைந்தது. சப்தா்ஜங் பகுதியில் காண்புதிறன் 300 மீட்டராக இருந்தது.
காற்றின் தரம்: தில்லியில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு
செவ்வாய்க்கிழமையும் மிக மோசமான பிரிவில் நீடித்தது.
தேசியத் தலைநகா் வலயப் பகுதியில் உள்ள காஜியாபாத், நொய்டா, கிரேட்டா் நொய்டா மற்றும் பரீதாபாத் பகுதியில் காற்றின் தரம் கடுமைப் பிரிவிலும், குருகிராம் பகுதியில் மிக மோசம் பிரிவிலும் பதிவானது.
24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு காஜியாபாதில் 436, கிரேட்டா் நொய்டாவில் 434, நொய்டாவில் 432, பரீதாபாதில் 416, குருகிராமில் 366 என பதிவானது.
திங்கள்கிழமை இந்த தரமானது காஜியாபாதில் 381, கிரேட்டா் நொய்டாவில் 360, நொய்டாவில் 363, பரீதாபாதில் 297, குருகிராமில் 330 ஆக பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.