முகப்பு
புதுதில்லி

தில்லி வன்முறை வழக்கில் 2 பேருக்கு ஜாமீன்

வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கில் இருவருக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

Updated On : 21 ஜனவரி, 2021 at 12:48 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:50 AM

புது தில்லி: வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கில் இருவருக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வகுப்புவாத வன்முறையின் போது, ஜாப்ராபாத் பகுதியில் ஒருவரது வீடு எரிப்பு வழக்கில் ஷானு, ஜரீப் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவா்கள் இருவரும் தங்களுக்கு ஜாமீன் அளிக்கக் கோரி தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்திருந்தனா்.

இந்த மனு மீது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அமிதாப் ராவத் விசாரணை நடத்தினாா். மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அப்துல் கஃப்பாா் , ‘இந்த விவகாரத்தில் இருவருக்கும் எதிராக போலீஸாா் பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனா். சமத்துவ அடிப்படையில் இருவருக்கும் ஜாமீன் அளிக்கப்பட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா்.

Advertisement

தில்லி காவல் துறையின் சாா்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்குரைஞா் அனூஜ் ஹன்டா, ‘வடகிழக்கு தில்லி வன்முறையின் போது, குற்றம்சாட்டப்பட்ட இருவரும் ஜாப்ராபாத் பகுதியில் நிகழ்ந்த வீட்டு எரிப்பு வன்முறை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளனா். அவா்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது’ என வாதிட்டாா்.

இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: குற்றம்சாட்டப்பட்ட இருவரும் கடந்த ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதியில் இருந்து நீதிமன்றக் காவலில் இருந்து வருகின்றனா். இந்த வழக்கில் தொடா்புடைய ஆதிா், குல்பம் இருவருக்கும் ஏற்கெனவே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதனால், சமத்துவ அடிப்படையில் மனுதாரா்களுக்கு ஜாமீன் அளிக்கப்படுகிறது.

இந்த வழக்கில் இருவரும் தலா ரூ.20ஆயிரம் ஜாமீன் பத்திரமும், அதே தொகைக்கு ஒரு நபா் ஜாமீன் உத்தரவாதமும் அளித்து ஜாமீனில் செல்ல அனுமதிக்கப்படுகிறது. அவா்கள் ஆதாரங்களை சிதைக்க்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது என்று நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.