பாஜக இல்லாத தமிழகப் பேரவை அமைய வேண்டும்: நிர்மலா சீதாராமன் கணவர் பிரபாகரன்!
பாஜக இல்லாத தமிழக சட்டப்பேரவை அமைய வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கணவர் பிரபாகரன் வலியுறுத்தினார்.
தமிழக சட்டப்பேரவையில் ஒரே ஒரு பாஜக எம்எல்ஏ கூட இருக்கக் கூடாது என்ற கொள்கை மிகவும் முக்கியம், அந்த கொள்கை பக்கம் தமிழக மக்கள் அனைவரும் நிற்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கணவர் பரகலா பிரபாகரன் வலியுறுத்தியிருக்கிறார்.
தமிழகத்துக்கு நான் வந்திருப்பதே, பாஜக இல்லாத தமிழக சட்டப்பேரவை என்ற கொள்கையை வலியுறுத்தத்தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பரகலா பிரபாகரன், ஏன் பாஜகவுக்கு வாக்களிக்கக் கூடாது என்று சொல்கிறேன் என்றால், மாநிலத்தில் நாம் கொண்டாடி வரும் பல வாய்ப்புகள் முடிந்துபோகும். குறிப்பாக மத நல்லிணக்கம், பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களிடையே இருக்கும் ஒற்றுமை அனைத்துக்கும் முடிவு கட்டுப்படும். சுதந்திரம், சமத்துவம் அனைத்தும் அழிக்கப்படும். பாஜகவுக்கு அளிக்கப்படும் வாக்கு, சமூக நீதிக்கான சாவு மணி. பாஜகவுக்கு வாக்களித்தால் அது பிரிவினையைத் தூண்டும் ஆயுதமாக மாறும்.
Advertisement
பாஜகவுக்கு வாக்களித்தால், நீங்கள் என்ன சாப்பிட வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும், என்ன மொழி பேச வேண்டும், எந்த மொழியில் படிக்க வேண்டும் என்பதை அவர்கள்தான் தீர்மானிப்பார்கள்.
அனைத்து மக்களும் ஒரு உறுதிமொழியை எடுங்கள், அதுதான், தேர்தல் முடிந்து உருவாகும் தமிழக சட்டப்பேரவை, ஒரு பாஜக எம்எல்ஏ-கூட இல்லாத பூஜ்யம் பாஜக என்ற நிலையை உருவாக்கும்வோம் என்பதை உறுதி செய்யுங்கள்.
பாஜகவுக்கு எதிராக மட்டுமல்ல, பாஜகவின் சித்தாந்தங்களுக்கு எதிரான, அதன் ஆதிக்க விசாரணை அமைப்புகளுக்கு எதிரான போராட்டமாகவும் இது இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எக்காரணம் கொண்டும் தமிழக பேரவைக்குள் பாஜகவை நுழைத்துவிடாதீர்கள் என்று வலியுறுத்தியிருக்கிறார் பரகலா பிரபாகரன்.