கலால் வரியைக் குறைக்காமல் இருந்திருந்தால் பெட்ரோல், டீசல் விலை ரூ. 10 உயர்ந்திருக்கும்: நிர்மலா சீதாராமன்
பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியைக் குறைக்காமல் இருந்திருந்தால், அதன் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்ந்திருக்கும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தது பற்றி...
பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியைக் குறைக்காமல் இருந்திருந்தால், அதன் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்ந்திருக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
மேற்காசியாவில் நிலவிவரும் போர்ச்சூழல் காரணமாகவும் உலகலவில் முக்கிய எண்ணெய் வழிப் போக்குவரத்தான ஹோர்முஸ் நீரிணை வழக்கம்போல் இயங்காமல் உள்ளதாலும் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயரந்துகொண்டே இருக்கிறது.
இதனால் சுமார் நான்கு ஆண்டுகளாக உயராமல் இருந்த பெட்ரோல், டீசலின் விலை கடந்த இரண்டு வாரங்களில் 4 முறை உயர்ந்துள்ளது.
Advertisement
Advertisement
அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 7.2, டீசல் விலை ரூ. 7.38 என்ற அளவு உயா்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வு காரணமாக சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ. 107.77-ஆகவும், டீசல் ஒரு லிட்டா் ரூ. 99.55 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்ததாவது:
ஏறக்குறைய 76 நாள்களாக அரசின் தரப்பில், மக்கள் மீது எந்தவொரு கூடுதல் சுமையும் சுமத்தப்படாமல் இருப்பதே எங்கள் நோக்கமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு கலால் வரியைக் குறைத்ததன் மூலம், ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் கோடிக்கும் அதிகமான நிவாரணத்தை நாங்கள் வழங்கியுள்ளோம்.
அந்த நேரத்தில், நாங்கள் கலால் வரியைக் குறைக்காமல் இருந்திருந்தால், அப்போதே பெட்ரொல், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ. 10 விலை உயர்ந்திருக்கும். ஆனால், தற்போதைய விலை உயர்வுகள் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களிடமிருந்து வருகின்றன. ஏனெனில் அவர்கள்தான் அதைக் கொள்முதல் செய்து விற்கின்றனர்.
மேலும், கடந்த மார்ச் 27 ஆம் தேதி, டீசல் மீதான கலால் வரி ரூ. 10-ஐ முழுமையாக ரத்து செய்தும், பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு ரூ. 13-ல் இருந்து ரூ. 3 ஆகவும் மத்திய நிதியமைச்சகம் குறைத்தது குறிப்பிடத்தக்கது.