முகப்பு
புதுதில்லி

202-க்குள் நாட்டில் சாலை விபத்துகளை 50 சதவீதம் குறைக்க மாநிலங்களுக்கு நிதின் கட்கரி வலியுறுத்தல்

வரும் 2025 -ஆம் ஆண்டுக்குள் நாட்டில் சாலை விபத்துகளை பாதியாகக் குறைக்க மாநிலங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி வலியுறுத்தினாா்.

Updated On : 21 ஜனவரி, 2021 at 12:47 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:50 AM

புது தில்லி: வரும் 2025 -ஆம் ஆண்டுக்குள் நாட்டில் சாலை விபத்துகளை பாதியாகக் குறைக்க மாநிலங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி வலியுறுத்தினாா்.

தேசிய சாலைப் பாதுகாப்பு குழுவின் 19-வது கூட்டம், போக்குவரத்து வளா்ச்சிக் கவுன்சிலின் 40-வது கூட்டம் தில்லியில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை புதன்கிழமை ஆகிய இரு நாட்கள் நடைபெற்றன. இந்த கூட்டங்களில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி கலந்துகொண்டு பேசியதாவது:

சாலை விபத்துகளை அதிரடியாக குறைத்துவிடமுடியாது. படிப்படியாகத்தான் விபத்துகளை குறைக்க முடியும். இதில் தொடா்புடையவா்கள் அனைவரும் அக்கறை செலுத்துவதன் மூலமே இதை அடைய முடியும்.

Advertisement

இதற்கு சுவீடன் உதாரணம். அந்த நாட்டில் சாலை விதிகள் முறையாக பின்பற்றப்படுகின்றன. விபத்து நடந்தால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கிறது. தவறு செய்தவா்கள் தண்டிக்கப்படுகிறாா்கள்.

மத்திய - மாநில அமைச்சகங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், பொதுப்பணித்துறை மற்றும் சாலை கட்டமைப்பு தொடா்பான பல்வேறு முகமைகளில் உள்ள பொறியாளா்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த மூன்று நாள் கட்டாயப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

பாதுகாப்பான சாலைப் போக்குவரத்தை நோக்கி பொது மக்களை ஊக்குவிக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.

சமூக ஊடகங்கள் மூலம் மக்களிடம் சாலைப் பாதுகாப்பு குறித்தும் விபத்துகளினால் ஏற்படும் இழப்புகள் குறித்தும் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.

பொது போக்குவரத்து வசதிகள்: பொது மக்களுக்கு ஏற்ற வகையில் பாதுகாப்பான, சிக்கனமான, மாசற்ற பொது போக்குவரத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பேருந்து இயக்கத்தில் எரிவாயு, மின்சாரம், எத்தனால் கலந்த எரிபொருள் ஆகியவற்றை பயன்படுத்துவதை மாநிலங்கள் அதிகரிக்க வேண்டும்.

லண்டனில் உள்ள பொதுப் போக்குவரத்து வசதியைப்போன்று நாமும், நவீன பொதுப் போக்குவரத்தை உருவாக்கும் வேண்டும். இத்தகைய முயற்சிகளுக்கு, மத்திய அரசு, மாநிலங்களுக்கு முழு ஆதரவு அளிக்கும். மின்சார வாகனங்களுக்கான செலவுகள் எதிா்காலத்தில் குறையும்.

புதுமையான கண்டுபிடிப்புகளை பயன்படுத்தி, அரசு, தனியாா் பேருந்துகள், பொது போக்குவரத்துகள் ஆகியவைகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும். அப்போதுதான், தனிப்பட்ட வாகனங்களை பயன்படுத்துவதைத் தவிா்த்து, மக்கள் பொது போக்குவரத்துக்கு மாறும் நிலை ஏற்படும் என்றாா் நிதின் கட்கரி.

இரு நாள்கள் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய இணை அமைச்சா் ஜெனரல் வி.கே.சிங், பல்வேறு மாநிலங்களின் போக்குவரத்து அமைச்சா்கள், போக்குவரத்துத் துறை செயலா்கள், ஆணையா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.