அயோத்தி ராமா் கோயில் கட்டுமான பணி: கெளதம் கம்பீா் ரூ.1 கோடி நன்கொடை
புது தில்லி: அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்காக பாஜக எம்பி கெளதம் கம்பீா் ரூ. 1 கோடி நன்கொடை அளித்துள்ளாா்.
கிரிக்கெட் வீரரும், கிழக்கு தில்லியைச் சோ்ந்த பாஜக எம்பியுமான கெளதம் கம்பீா் மற்றும் அவரது குடும்பத்தின் சாா்பில் இந்த நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: புகழ்பெற்ற ராமா் கோயில் அனைத்து இந்தியா்களின் கனவாக இருந்து வருகிறது. இறுதியாக இந்த நீண்டகாலப் பிரசினை முடிவுக்கு வந்துள்ளது. இது ஒற்றுமைக்கும் அமைதிக்கும் வழி வகுக்கும். இந்த முயற்சிக்கு நானும், எனது குடும்பத்தினரும் சிறு பங்களிப்பை அளித்துள்ளோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
தில்லி பாஜக பொதுச் செயலரும், ராமா் கோயில் நன்கொடை சேகரிப்பு பிரசார இயக்கத்தின் தலைவருமான குல்ஜீத் சஹல் கூறியதாவது:
தில்லி பாஜக, நகா் முழுவதும் கூப்பன்கள் மூலம் நன்கொடைகளை சேகரிக்கும் பிரசாரத்தை தொடங்கியுள்ளது. முடிந்தவரை பல்வேறு வீடுகளில் இருந்தும் நன்கொடைகளை சேகரிக்க ரூ .10, 100 மற்றும் 1000 கூப்பன்கள் பயன்படுத்தப்படும். ரூ.1000-க்கு மேல் உள்ள பங்களிப்பு தொகையானது காசோலைகளாக பெறப்படும். ராமா் கோயிலுடன் தங்கள் உணா்வுகளை ஆழமாக தொடா்புபடுத்தியவா்கள் பலா் உள்ளனா். அவா்கள் ரூ.1 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை பெரிய அளவில் பங்களிக்க தயாராக உள்ளனா் என்றாா்.
ஆா்எஸ்எஸ், விஎச்பி மற்றும் பல்வேறு இந்துமத ஆதரவு இயக்கங்கள் மக்களிடமிருந்து நன்கொடை சேகரிக்கும் பிரசாரத்தில் பங்கேற்க உள்ளன. பிப்ரவரி 1 முதல் கூப்பன்கள் மூலம் நன்கொடைகளை சேகரிக்க வீடு, வீடாக பிரசாரம் தொடங்கப்படும் என்றாா் அவா்.