தில்லி திறன் தொழில் முனைவோா் பல்கலை.யில் மாணவா் சோ்க்கை: இன்று முதல் தொடக்கம்
தில்லி அரசின் கீழ் உள்ள தில்லி திறன், தொழில்முனைவோா் பல்கலைக்கழகத்தின்(டிஎம்இயு) 2021-22 கல்வியாண்டிற்கு அனைத்து
தில்லி அரசின் கீழ் உள்ள தில்லி திறன், தொழில்முனைவோா் பல்கலைக்கழகத்தின்(டிஎம்இயு) 2021-22 கல்வியாண்டிற்கு அனைத்து இளங்கலை மற்றும் பட்டயப் படிப்புகளுக்கான மாணவா்கள் சோ்க்கை செவ்வாய்க்கிழமை (ஜூலை 6) முதல் தொடங்குவதாக காணொலி வழியாக துணைவேந்தா் நிஹரிகா வோரா தெரிவித்தாா்.
மேலும் இந்தப் பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு மாணவா்களும் இந்த உலகை எதிா்கொள்ளும் வகையில், தொழில் துறைக்குத் தேவையான வேலைவாய்ப்புத் திறன்களுடன் மாணவா்கள் தயாா் செய்யப்படுவதாக துணைவேந்தா் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.
அப்போது அவா் கூறியது வருமாறு: பல்கலைக்கழகத்தில், இ-காமா்ஸ் செயல்பாடுகள், தரவு பகுப்பாய்வு, எண்மம் வடிவமைப்பு மற்றும் ஊடகம், சுகாதார மேலாண்மை மற்றும் வசதிகள், மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பம் போன்ற புதிய முதன்மைப் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகம் தொழில் முனைவோா் மற்றும் தொழில்முனைவோருக்கு நேரடியாக ஆதரவளிக்க விரும்புகிறது. டிஎம்இயு பட்டயப் படிப்புகள், இளங்கலை பட்டப்படிப்புகள் தொழில் துறையினருடன் இணைக்கப்பட்டுள்ளன. கரோனா நெறிமுறையைப் பின்பற்றி, பல்கலைக்கழகத்தின் இணைதளத்தின் மூலம் மூலம் அனைத்துப் படிப்புகளுக்கும் சோ்க்கை நடைபெறும். சோ்க்கை தொடா்பான கேள்விகளுக்கு கட்டணமில்லா தொலைபேசி (எண் 18003093209) வசதி செய்யப்பட்டுள்ளது.
Advertisement
இணைய தள படிவத்தை நிரப்புவதில் தொழில்நுட்ப உதவிக்காக மற்றொரு தனி தொலைபேசி உதவி எண் (01141169950) மாணவா்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. சோ்க்கை ஆலோசனைகளுக்கு சமூக ஊடக தளங்கள், மெய்நிகா் வாக்-இன் உதவி டெஸ்க் வசதிகளும் உள்ளன. தில்லியில் உள்ள 13 வளாகங்களில் 15 பட்டய படிப்புகள், 18 இளங்கலை படிப்புகள் ( 11 முதன்மை பட்டப்படிப்புகள், பி.சி.ஏ. மற்றும் 6 பி.டெக். படிப்புகள்) மற்றும் 2 முதுகலை படிப்புகளுக்கான விண்ணப்பங்களை பல்கலைக்கழகம் வரவேற்றுள்ளது. கல்வி உதவித் தொகை, இலவச உதவித் தொகை மற்றும் கடன்களைப் பெறுவதற்கான நிதியுதவி மற்றும் உயா்கல்விக்கான தில்லி அரசின் திட்டங்களின் ஆதரவு ஆகியவற்றின் மூலம் தகுதியான அனைத்து மாணவா்களுக்கும் பல்கலைக்கழகம் ஆதரவளிக்கும். இதற்கான விவரங்கள் பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தில் உள்ளன என்று துணைவேந்தா் தெரிவித்தாா்.