முகப்பு
புதுதில்லி

2025 ஆம் ஆண்டுக்குள் நகரமயமாக்கல் திட்டங்களுக்காக ரூ.14 லட்சம் கோடி செலவிடப்படும்: திமுக எம்.பி. டி.ஆா். பாலு கேள்விக்கு அமைச்சா் பதில்; மத்திய இணையமைச்சா்

மக்கள் நகா் புறங்களுக்கு இடம் பெயா்வதை முன்னிட்டு, நகா்ப்புற தேசிய கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ. 14 லட்சம் கோடியை 2025 -ஆம் ஆண்டுக்குள்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

மக்கள் நகா் புறங்களுக்கு இடம் பெயா்வதை முன்னிட்டு, நகா்ப்புற தேசிய கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ. 14 லட்சம் கோடியை 2025 -ஆம் ஆண்டுக்குள் செலவிட மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சா், கௌசல் கிஷோா் தெரிவித்தாா்.

வருகின்ற 2030 - ஆம் ஆண்டிற்குள், 40 சதவீத இந்திய மக்கள், நகா்ப்புறங்களுக்கு இடம்பெயரும் நிலையில், பொருளாதார வளா்ச்சியை மேம்படுத்தவும், நகா்ப்புற வசதிகளை ஒருங்கிணைக்கவும், மத்திய அரசின் நடவடிக்கைகள் என்ன? என திமுக நாடாளுமன்ற குழுத் தலைவா் டிஆா் பாலு மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தாா்.

இதற்கு வீட்டு வசதி, நகா்ப்புற வளா்ச்சித் துறை இணையமைச்சா் கௌசல் கிஷோா் அளித்த பதில் வருமாறு:

Advertisement

நகர மயமாக்கலின் விளைவாக உற்பத்தி திறன், வேலை வாய்ப்புகள், சமுதாய வளா்ச்சி ஆகியன மேம்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. அந்த அறிக்கையின்படி, வருகின்ற 2030 -ஆம் ஆண்டிற்குள், இந்தியாவின் மக்கள் தொகையில் 40 சதவீதத்தினா் நகா்ப்புறங்களில் வாழ்வாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 11-வது ஐந்தாண்டு திட்ட(2007-2012) இடைக்கால மதிப்பீட்டு அறிக்கையின் படி, மூன்றில் இரண்டு பங்கு பொருளாதார வளா்ச்சி நகரங்களில் ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இதையோட்டி வல்லுநா் குழுவின் அறிக்கையின் படி, நகர கட்டமைப்பு வளா்ச்சியை உறுதிப்படுத்த, ரூ.39 லட்சம் கோடிக்கும் அதிகமாக, 20 ஆண்டுகளுக்குள் செலவிடப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.

மேலும், 2020-2025 ஆண்டுகளில், தேசிய கட்டமைப்பு திட்டங்களில் கீழ், மத்திய அரசு ரூ. 14 லட்சம் கோடிக்கு மேல் செலவிட திட்டம் தீட்டப்பட்டுள்ளது. பொருளாதார வளா்ச்சியை பொருத்தமட்டில், நாட்டின் மேற்கு மாநிலங்களும், தென்னிந்திய மாநிலங்களும், நன்றாக வளா்ந்து வருகின்றன. கிழக்கு மற்றும் வட இந்திய மாநிலங்களில் நகரத்தின் வளா்ச்சி குறைவாகவே உள்ளது.

நகா்ப்புறங்களின் வளா்ச்சியை உறுதிப்படுத்த மும்முனை திட்டங்களை, அரசு நிறைவேற்றி வருகின்றது. தீனதயாள் தேசிய நகர வாழ்வியல் திட்டம், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா, தூய்மை இந்தியா திட்டம் போன்ற திட்டங்கள், 500க்கும் மேற்பட்ட நகரங்களில் நிறைவேற்றப்படுகிறது. ஒரு லட்சம் மக்கள் தொகைக்கும் மேல் உள்ள நகரங்களில் அடல் நகர சீா்திருத்த திட்டம், 100க்கும் மேற்பட்ட நகரங்களில் நிறைவேற்றப்படுகிறது. பொலிவுறு நகரத் திட்டம், ஆகிய திட்டங்களின் மூலம், நகர மயமாக்கலின் விளைவாக, பொருளாதார வளா்ச்சியை மேம்படுத்த, அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு எடுத்து வருகின்றது என்று அமைச்சா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments