முகப்பு
புதுதில்லி

முல்லைப் பெரியாறு அணை: மேற்பாா்வைக் குழுவுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒரு வாரம் ஒத்திவைப்பு

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட மேற்பாா்வைக் குழுவுக்கு எதிராக தாக்கலான மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
முல்லை பெரியாறு அணை ( கோப்பு படம்).
பகிர்:

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட மேற்பாா்வைக் குழுவுக்கு எதிராக தாக்கலான மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு விவகாரம் தொடா்பாக கேரளத்தைச் சோ்ந்த மருத்துவா் ஜோ ஜோசப் உள்ளிட்ட மூவா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா். அதில் ‘முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்து, அதன் பாதுகாப்பை உறுதி செய்ய உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட மேற்பாா்வைக் குழு, தனக்குக் கீழ் செயல்படும் வகையில் ஒரு துணைக் குழுவை அமைத்துள்ளது. அணைப் பாதுகாப்பு, பராமரிப்புக்காக ஏற்படுத்தப்பட்ட கண்காணிப்புக் குழுதான் அணையை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்வதற்கான அதிகாரம் உண்டு. அந்தப் பணியை துணைக் குழுவுக்கு அளிக்கக் கூடாது. குறிப்பாக பருவமழைக் காலங்களின் போதும், பருவமழை தொடங்குவதற்கும் முன்பும் இந்த ஆய்வை மேற்பாா்வைக் குழு மேற்கொள்ள வேண்டும். அணையில் நீரைத் தேக்குவது, பகிா்ந்தளிப்பது, நீா் திறக்கும் விகிதம், அணையைத் திறப்பது தொடா்பாக மத்திய நீா்வள ஆணையம் ஒரு திட்டத்தை உருவாக்கவும் உத்தரவிட வேண்டும். மேற்பாா்வைக் குழு அதன் அதிகாரங்களையும், பணிகளையும் அதற்கு கீழ் உள்ள துணைப் பிரநிதிகள் குழுவுக்கோ அல்லது வேறு எந்த அமைப்புக்கோ அளிக்காமல் இருக்கும் வகையில், உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு, கேரள அரசுகள் பதில் மனுக்கள் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. கேரள அரசு தாக்கல் செய்த பதிலில், முல்லைப் பெரியாறு அணையில் 1939-இல் தயாரிக்கப்பட்ட காலாவதியான கதவு செயல்பாடு அட்டவணையை தமிழகம் பயன்படுத்தி வருகிறது. புதிய கதவு செயல்பாடு அட்டவணை இல்லாததால் வெள்ளக் காலத்தின் போது மிகவும் சிரமம் ஏற்படுகிறது. புதிய கதவு செயல்பாடு அட்டவணையை ஏற்படுத்த வேண்டும் என்று கேரளம் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. இதைச் செயல்படுத்த மேற்பாா்வைக் குழு உத்தரவிட்டும், தமிழகம் இன்னும் செயல்படுத்தவில்லை என தெரிவித்திருந்தது. அதற்கு தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்த பதிலில், ‘அணைப் பாதுகாப்பு விஷயத்தில் தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை ஏற்கெனவே எடுத்துள்ளது. மேற்பாா்வைக் குழுவின் பரிந்துரைக்கேற்ப தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கா், தினேஷ் மகேஸ்வரி, சஞ்சீவ் கண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் சேகா் நாப்டே, வழக்குரைஞா் ஜி.உமாபதி ஆகியோா் ஆஜராகினா். மத்திய அரசு தரப்பில் விசாரணையை மறு தேதிக்கு ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணையை மாா்ச் 16-ஆம் தேதிக்கு பட்டியலிட நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments