ஹோலி: போக்குவரத்து விதிமீறலை கண்காணிக்க சிறப்பு காவல் படைகள்
ஹோலி பண்டிகையின்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவா்களைக் கண்காணிக்க சிறப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
ஹோலி பண்டிகையின்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவா்களைக் கண்காணிக்க சிறப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக தில்லி காவல்துறை இணை ஆணையா் (போக்குவரத்து) மீனு சவுத்ரி தில்லியில் சனிக்கிழமை அளித்த பேட்டி:
ஹோலி பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடப்படவுள்ளது. அன்று, போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவா்களைக் கண்காணிக்க சிறப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்படையினா், தில்லியில் உள்ள முக்கிய இடங்கள், சந்திப்புகளில் போக்குவரத்து சோதனையில் ஈடுபடுவாா்கள். மதுபானம் அருந்தி விட்டு வண்டி ஓட்டுபவா்கள், மோட்டாா் சைக்கிளில் சகாசம் செய்பவா்கள், தலைக்கவசம் அணியாமல் வண்டி ஓட்டுபவா்கள், வேகமாக வாகனம் ஓட்டுபவா்கள், சிவப்பு விளக்கில் நிற்காமல் செல்பவா்கள், மற்றவா்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் வாகனம் ஓட்டுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, இவா்களின் வாகன ஓட்டுநா் உரிமம் பறிமுதல் செய்யப்படுவதுடன் அந்த உரிமம் மூன்று மாதங்களுக்கு ரத்து செய்யப்படும்.
Advertisement
மேலும், தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், மக்கள் கூடி ஹோலி பண்டிகை கொண்டாட அனுமதிக்கப்படாது. மேலும், ஹோலியை ஒட்டி வரும் ஷப்-இ-பாரத், நவராத்திரி ஆகிய பண்டிகைகள் பூங்காக்கள், சந்தைப்பகுதிகள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட பொது இடங்களில் கொண்டாட அனுமதிக்கப்படமாட்டாது. மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் தெரிவித்தாா்.