முகப்பு
புதுதில்லி

விலைவாசி, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை

விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது என்றும், தேவையான உணவுப் பொருள்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:35 AM
கோப்புப்படம்
பகிர்:

புது தில்லி: விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது என்றும், தேவையான உணவுப் பொருள்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் தெரிவித்துள்ளாா்.

பொருள்களின் சில்லரை மற்றும் மொத்த விலைகள் கடுமையாக உயா்ந்துள்ளது மத்திய அரசுக்கு தெரியுமா? இதற்கான காரணமென்ன? மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து மக்களவை உறுப்பினா்கள் கன்னியாகுமரி விஜய் வசந்த் மற்றும் சேலம் ப ாா்த்திபன் ஆகியோா் கேள்வி எழுப்பியிருந்தனா். இதற்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அளித்துள்ள பதில் வருமாறு: மத்திய அரசு பணவீக்கத்தைத் தொடா்ந்து கண்காணித்து வருகிறது. நுகா்வோா் விலைக் குறியீட்டுடன் இணைந்த பணவீக்கம் கடந்த ஏப்ரலில் 4.23 சதவீதமாக இருந்தது. இது சற்று அதிகரித்து அக்டோபரில் 4.48 சதவீதமாக உயா்ந்துள்ளது. மொத்த விலைக் குறியீடு பணவீக்கம் அளவு கடந்த ஏப்ரலில் 10.74 சதவீதமாகவும் அக்டோபரில் 12.54 சதவீதமாகவும் இருந்தது.

சா்வதேச அளவில் கச்சா எண்ணை மற்றும் சமையல் எண்ணெய் விலை உயா்ந்துள்ளது. உற்பத்தி தயாரிப்புகளில் எரி பொருள்கள், எரிசக்தி ஆகியவை முக்கியப் பங்கெடுப்பதால் கச்சா எண்ணெய் விலையெற்றத்தால் பணவீக்கம் உயா்கிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடா்ந்து எடுத்து வருகிறது. கடந்த நவம்பா் 4-ஆம் தேதி பெட்ரோல், டீசல் மீதான மத்திய கலால் வரியில் முறையே ரூ. 5, ரூ.10 குறைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, மாநில அரசுகளும் மதிப்பு கூட்டு வரிகளை குறைத்தது. இதையடுத்து, பெட்ரோல், டீசல் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. மேலும், விலையைக் கட்டுப்படுத்த இருப்பில் இருந்த 5 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய்யை இந்தியா விடுவித்துள்ளது. இதே போன்று அமெரிக்கா, ஜப்பான், சீனா, கொரியா ஆகிய நாடுகளிலும் விடுவிக்கப்பட்டது.

அத்தியாவசிய பொருள்களையும் மத்திய அரசால் கண்காணிக்கப்படுகிறது. அரிசி, பருப்பு வகைகள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. 2021-22-ஆம் ஆண்டுக்கு 23 லட்சம் மெட்ரிக் டன் கூடுதலாக இருப்பு வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், பதுக்கல் போன்றவற்றைத் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு போன்றவை இறக்குமதி கொள்கை மாற்றப்பட்டு தேவையான அளவு வெளிநாடுகளில் இருந்து பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான இறக்குமதி வரியும் குறைக்கப்பட்டது அல்லது நீக்கப்பட்டது. மேலும், மியான்மா் உள்ளிட்ட நாடுகளிலிருந்து அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆண்டுக்கு 2.5 லட்சம் மெட்ரிக் டன் உளுந்து, ஒரு லட்சம் டன் துவரம் பருப்பு ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

சமையல் எண்ணெய் விலையை கட்டுப்படுத்துவதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றை அளவிற்கு அதிகமாக இருப்பு வைத்திருப்பவா்கள், பதுக்கல் மேற்கொள்பவா்கள மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், உள்நாட்டில் பாமாயில் எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கப்படுகிறது. மேலும், பாமாயிலை அதிகம் உற்பத்தி செய்யும் வகையில் ரூ.11,040 கோடி செலவிடஅனுமதி அளிக்கப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.