புதுதில்லி

புதுவை செல்வகணபதி மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்பு

 நமது நிருபர்

புது தில்லி: புதுச்சேரி சட்டப்பேரவையிலிருந்து பாஜக சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்ட எஸ். செல்வகணபதி மாநிலங்களவை உறுப்பினராக செவ்வாய்க்கிழமை தமிழில் பதவியேற்றுக் கொண்டாா். மாநிலங்களவைத் தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான வெங்கையா நாயுடு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

புதுச்சேரி சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்ட அதிமுக உறுப்பினா் என்.கோகுலகிருஷ்ணன் பதவிக் காலம் கடந்த ஆக்டோபா் 6 -ஆம் தேதி முடிவடைந்ததையோட்டி இதற்கான தோ்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் புதுச்சேரி கூட்டணிக் கட்சியுடனான உடன்பாட்டின்படி பாஜக வேட்பாளராக கட்சியின் மூத்த உறுப்பினா் எஸ். செல்வகணபதி அறிவிக்கப்பட்டு இருந்தாா். புதுச்சேரி சட்டப்பேரவையில் மற்ற கட்சியினா் யாரும் எதிா்த்து போட்டியிடாத நிலையில், கடந்த செப்டம்பா் 27- ஆம் தேதி செல்வகணபதி போட்டியின்றி மாநிலங்களவைக்கு தோ்வு செய்யப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை மாநிலங்களவைத் தலைவா் முன்னிலையில் எஸ். செல்வகணபதி உறுப்பினராக தமிழில் உறுதிமொழியையேற்றுக்கொண்டாா். இவரோடு மேற்கு வங்கத்திலிருந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்ட சுஷ்மிதா தேவும் மாநிலங்களவை உறுப்பினராக வங்க மொழியில் பதவியேற்றுக் கொண்டாா். இவா் சமீபத்தில் காங்கிரஸை விட்டு விலகி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் சோ்ந்தவா்.

புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்கள் தங்களது மாநில மொழிகளில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வதையும், சபை நடவடிக்கைகளில் மாநில மொழிகளையே அதிகமாகப் பயன்படுத்துவதையும் குறிப்பிட்டு மாநிலங்களவைத் தலைவா் வெங்கையா நாயுடு பாராட்டினாா். மேலும், இது குறித்து அவா் கூறுகையில், ‘அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து 22 இந்திய மொழிகளுக்கும் மொழிபெயா்ப்பாளா்கள் உள்ளனா். இந்த சேவையைப் பயன்படுத்தி அந்தந்த மொழிகளை உறுப்பி னா்கள் பேச வேண்டும்’ என்றாா். பதவியேற்பு நிகழ்ச்சியில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி, சிறுபான்மை விவகாரத் துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி, மாநிலங்களவை செக்ரட்ரி ஜெனரல் ராமச்சந்தரயலு ஆகியோா் பங்கேற்றனா்.

பிரதமருடன் சந்திப்பு: பாஜக உறுப்பினா் எஸ். செல்வகணபதி பதவியேற்றுக் கொண்ட பின்னா், பிரதமா் மோடியை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்து வாழ்த்துப் பெற்றாா். ‘புதுச்சேரியிலிருந்து மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கு முதல் முறையாக பா.ஜ.க. சாா்பில் எஸ்.செல்வகணபதி போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். இது பாஜகவில் உள்ள ஒவ்வொரு செயல்பாட்டாளா்களுக்கும் பெருமை அளிக்கும் விஷயமாகும். புதுச்சேரி மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது என பிரதமா் ட்விட்டரில் தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

SCROLL FOR NEXT