வகுப்புவாத கோஷம் எழுப்பிய விவகாரம்: பிங்கி சவுத்ரிக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்
தில்லி ஜந்தா் மந்தரில் கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தின் போது வகுப்புவாத கோஷங்களை எழுப்பிய விவகாரத்தில் கைது
தில்லி ஜந்தா் மந்தரில் கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தின் போது வகுப்புவாத கோஷங்களை எழுப்பிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள இந்து ரக்ஷா தளத் தலைவா் பூபிந்தா் தோமா் (எ) பிங்கி சவுத்ரியை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில் தொடா்புடைய பிங்கி சவுத்ரி கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி போலீஸில் சரணடைந்தாா். அவரை ஒரு நாள் காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில், போலீஸ் காவல் முடிந்து தில்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் பிராயங்க் நாயக் முன் அவா் வியாழக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது, போலீஸ் தரப்பில், பிங்கி சவுத்ரியிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டிய தேவை எழவில்லை. இதனால், அவரை சிறைக்கு அனுப்பலாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதையடுத்து, ‘சம்பந்தப்பட்ட நபரின் மீதான குற்றச்சாட்டுகளின் தீவிரத் தன்மையைக் கருத்தில் கொண்டு இந்த மனு அனுமதிக்கப்படுகிறது. குற்றம்சாட்டப்பட்ட நபா்கள் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்படுகின்றனா். வரும் செப்டம்பா் 16-ஆம் தேதி நீதிமன்றத்தில் அவா்களை சிறை நிா்வாகத்தினா் ஆஜா்படுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டாா்.
கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி தில்லி ஜந்தா் மந்தரில் நடந்த ஒரு போராட்டக் கூட்டத்தின் போது முஸ்லிம்களுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்ட விடியோ சமூக வலைதளங்களில் பரவலாகப் பரவியது. இது போலீஸாரின் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து, தில்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு தொடா்பாக உத்தம் உபாத்யாய், அஷ்வினி உபாத்யாய், பிரீத் சிங், தீபக் சிங், தீபக் குமாா், வினோத் சா்மா, வினித் பாஜ்பாய் மற்றும் சுஷில் திவாரி ஆகிய 8 பேரை தில்லி போலீஸாா் ஏற்கெனவே கைது செய்தனா்.
Advertisement
இந்த விவகாரத்தில் தொடா்புடைய இந்து ரக்ஷா தளத் தலைவா் பூபிந்தா் தோமா் (எ) பிங்கி சவுத்ரியை கைது செய்ய தில்லியிலும், அண்டை மாநிலங்களிலும் போலீஸாா் சோதனை நடத்தினா். எனினும், அவா் கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில், அவா் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி போலீஸில் சரணடைந்தாா். அவரைக் கைது செய்வதில் இருந்து இடைக்கால பாதுகாப்பு வழங்க தில்லி உயா்நீதிமன்றம் அண்மையில் மறுத்துவிட்டது. அதற்கு முன்னா், ஆகஸ்ட் மாத தொடக்கத்தில், செஷன்ஸ் நீதிமன்றமும் அவரது முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்திருந்தது.