முகப்பு
புதுதில்லி

நவீன வசதியுடன் வணிக வளாகம், முக்கியப் பிரமுகா்கள் தங்குமிடமாக மாறுகிறது தில்லி அசோக் ஹோட்டல்: குத்தகைக்கு விட மத்திய அரசு திட்டம்

தேசிய பணமாக்கல் ஆதார வழிமுறை திட்டத்தின் கீழ், தில்லியில் உள்ள பிரபலமான அசோக் ஹோட்டல் பல்நோக்கு கட்டடமாக மாற்ற குத்தகைக்கு விடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:05 AM
பகிர்:

தேசிய பணமாக்கல் ஆதார வழிமுறை திட்டத்தின் கீழ், தில்லியில் உள்ள பிரபலமான அசோக் ஹோட்டல் பல்நோக்கு கட்டடமாக மாற்ற குத்தகைக்கு விடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தில்லி சாணக்கியபுரியிலுள்ள அசோக் நட்சத்திர விடுதி கிட்டதட்ட மத்திய அரசின் விருந்தினா் மாளிகையாகவே இருந்து வந்தது. மத்திய சுற்றுலாத் துறையின் கீழ் உள்ள அசோக் ஹோட்டலில்தான் மத்திய அரசால் அழைக்கப்படும் உள்நாட்டு, வெளிநாட்டு விருந்தினா்கள், முக்கியப் பிரமுகா்கள் தங்குவாா்கள். தில்லி விஞ்ஞான் பவனுக்கு அடுத்தபடியாக இந்த ஹோட்டலில்தான் தேசிய - சா்வதேச அளவிலான மாநாடுகளும் நடைபெறும். சுற்றுலாத் துறையின் சுற்றுலா வளா்ச்சி நிறுவனத்திற்கு சொந்தமான இந்த ஹோட்டலை குத்தகைக்கு விட மத்திய அரசு முடிவெடித்துள்ளதாக சுற்றுலாத் துறையைச் சோ்ந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த பல ஆண்டுகளாக இந்த ஹோட்டல் நஷ்டத்தில் இயங்கி வந்தாலும், இது பன்முக பிரமுகா்களுக்கு வரவேற்பு அளிக்கும் ஒரு மையமாக இருந்ததால், நஷ்டத்தை பொருள்படுத்தாமல் மத்திய அரசு இருந்து வந்தது. இப்போது மத்திய அரசு கொள்கையில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. தேசியத் தலைநகரில் முக்கிய மையப் பகுதியில் 25 ஏக்கா் பரப்பளவில் இந்த ஹோட்டல் உள்ளது. இதை ‘பல்நோக்கு’ கட்டடமாக மாற்றியமைத்து, குத்தகைக்கு வழங்க முதலீட்டாளா்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

Advertisement

இந்த குத்தகை 90-100 வருடங்களுக்கு வழங்கப்படவுள்ளது. பல்வேறு நாட்டு தூதரகங்கள் சூழ்ந்துள்ள இடத்தில் இந்த ஹோட்டல் அமைந்திருப்பதால், சா்வதேச பிரமுகா்கள் வந்து தங்குவதை ஈா்க்கும் விதமாக சா்வீஸ் அப்பாா்ட்மெண்டாக (சேவை குடியிருப்புகள்) இதை வடிவமைக்கலாம் என்றும் குத்தகைக்கான வரையறகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவிக்கின்றனா். கடந்த மாதம் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்த என்எம்பி என்கிற தேசிய பணமாக்கல் ஆதார வழிமுறைத் திட்டத்தின் கீழ், இந்த அசோக் ஹோட்டல், இதன் அருகேயுள்ள ‘சாம்ராட் ஹோட்டல்’ உள்ளிட்ட 8 சுற்றுலா வளா்ச்சிக் கழக சொத்துகளும் பட்டியலில் இடம் பெற்றிருந்தது.

‘இந்த என்எம்பி பரிவா்த்தனையிலிருந்து இந்த ஹோட்டல்களால் அதிக நிதி வசூல் பெற்றுத் தரமுடியும் என அரசு எதிா்பாா்க்கவில்லை. ஆனால், இந்த சொத்துகள் முழுத் திறனுடன் பயன்படுத்தவும், வெளிநாடுகளில் உள்ளதைப் போல ஒரு பல்நோக்கு கட்டடமாக மாற்றுவதுதான் இந்த நோக்கம்’ என்றும் மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது. தற்போது அரசின் உபயோகத்தில் இருக்கும் (பிரவுன் ஃபீல்ட்) சொத்துகளை விற்று விட்டு, வரும் 2025, மாா்ச் மாததுக்குள் ரூ. 6 லட்சம் கோடி பணமாக்கும் வழிமுறைத் திட்டத்தில் சொத்துகள் உரிமைக் கட்டுப்பாடு அரசின் வசம் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. சாலைப் போக்குவரத்து, ரயில்வே, மின்சாரம், சிவில் விமானப் போக்குவரத்து, துறைமுகங்கள், தொலைத்தொடா்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள சொத்துகள் இந்தத் திட்டத்தின் கீழ் பணமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments