மோடிக்கு கேரள முதல்வர் விஜயன் பயப்படுகிறார்! - ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் நரேந்திர மோடிக்கு பயப்படுகிறார் என ராகுல் காந்தி குற்றச்சாட்டு...
கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் நரேந்திர மோடியைக் கண்டு பயப்படுகிறார் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
கேரளத்தில் வரும் ஏப். 9 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து, கொச்சியில் நடைபெற்ற பிராசரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தனது குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக பிரதமர் மோடியைக் கண்டு பயப்படுகிறார் எனக் கூறியுள்ளார்.
முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணாவின் தலைமையில் இயங்கி வந்த எக்ஸாலாஜிக் எனும் ஐடி நிறுவனத்துக்கும், கொச்சின் மினரலஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கும் இடையே சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கைச் சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, ஊழலில் முதல்வர் விஜயன் சமரசம் செய்துவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
Advertisement
இதுபற்றி, அவர் கூறியதாவது:
“எந்த தந்தைதான் தனது குழந்தைகளைப் பாதுகாக்க முயற்சி செய்யாமல் இருப்பார்? ஆனால், அவர் நாட்டின் தீவிர வலது சாரியாகவுள்ள கூட்டத்திடம் பாதுகாப்பு தேடுகிறார். தனது குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக முதல்வர் விஜயன் அரசை தியாகம் செய்கிறார்” எனக் கூறியுள்ளார்.
இத்துடன், சபரிமலை விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனமாக இருப்பது, அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களைக் காப்பாற்றுவதற்காக எனவும், அதானி குழுமம் மற்றும் எப்ஸ்டீன் கோப்புகளால் பிரதமர் மோடி மிகுந்த அழுத்தத்தில் இருப்பதாகவும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
முன்னதாக, கேரள தேர்தலில் ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.