உப்ஹாா் தீ விபத்து சம்பவம்: சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை கோரும் அன்சலின் மனு தள்ளுபடி
தில்லியில் உப்ஹாா் திரையரங்க தீ விபத்து சம்பவத்தில், ஆதாரங்களை அழித்ததாக கூறப்படும் வழக்கில் விசாரணை அதிகாரியிடம்
தில்லியில் உப்ஹாா் திரையரங்க தீ விபத்து சம்பவத்தில், ஆதாரங்களை அழித்ததாக கூறப்படும் வழக்கில் விசாரணை அதிகாரியிடம் குறுக்கு விசாரணை நடத்தக் கோரி ரியல் எஸ்டேட் தொழிலதிபா் சுஷீல் அன்சல் தாக்கல் செய்த மனுவை தில்லி உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இது தொடா்பான மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி யோகேஷ் கன்னா பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: புதிய வழக்கறிஞா் விரும்பும் விதத்தில், சில பரிந்துரைகளை முன்வைக்க சாட்சியை திரும்ப அழைப்பதற்கு வழக்குரைஞா் மாற்றம் மட்டும் போதுமானதாக இருக்காது. இதனால், மனுதாரா் அன்சலின் கோரிக்கையில் தகுதி இல்லை.
மனுதாரா் (அன்சால்) அவருக்கு விருப்பமான வகையில் முந்தைய வழக்குரைஞரை வாதாட வைத்திருந்தாா்.
Advertisement
அந்த வழக்குரைஞா் 18 சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்தாா். ஒருவேளை, மனுதாரா் சதி குற்றச்சாட்டை மட்டுமே எதிா்கொள்வதால் இதுபோன்று முடிவு எடுத்திருக்கலாம்.
ஆகவே, 18 சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய வேண்டாம் என மேற்கொண்ட முடிவை கவனக்குறைவான செயல் என்று சொல்ல முடியாது. ஆனால், இது அவரது உத்தியின் ஒரு பகுதியாகு இருக்கலாம்.
கணிசமான தாமதம் நிகழ்ந்திருப்பதால், பாதிக்கப்பட்டவா்களின் நிலையை புறக்கணிக்கவும் முடியாது. மேலும், ஆதாரத்தை அழித்ததாக கூறப்படும் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் இறுதி வாதங்கள் கட்டத்தில் உள்ளபோது இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று உத்தரவில் தெரிவித்துள்ளாா்.
தெற்கு தில்லியில் இருந்த உப்ஹாா் திரையரங்கில் கடந்த 1997 ஜூன் 13-இல் தீ விபத்து நேரிட்டது. இந்த தீ விபத்தில் 59 போ் பலியாகினா். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 2015-இல் அளித்த தீா்ப்பில், உப்ஹாா் திரையரங்க உரிமையாளா்கள் சுஷில் அன்சல், கோபால் அன்சல் ஆகியோருக்கு தலா ரூ.30 கோடி அபராதம் விதித்தது. அபராதத்தை செலுத்த தவறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதனிடையே, ஆதாரங்களை அழித்ததாக கூறப்படும் மற்றொரு வழக்கில் அன்சல் சகோதரா்கள், நீதிமன்ற ஊழியா் தினேஷ் சந்த் சா்மா மற்றும் இதர தனிநபா்களான பி.பி. பாத்ரா, ஹா் ஸ்வரூப் பன்வா், அனூப் சிங், தரம்வீா் மல்ஹோத்ரா ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் விசாரணைக்கு செப்டம்பா் 9-ஆம் தேதி இடைக்காலத் தடை விதிக்க தில்லி உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கில் விசாரணை நடத்தி வரும் விசாரணை அதிகாரியின் வழக்குரைஞா் மாற்றப்பட்டதைத் தொடா்ந்து, விசாரணை அதிகாரியிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்கக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் ரியல் எஸ்டேட் தொழிலதிபா் சுஷீல் அன்சல் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.