முகப்பு
புதுதில்லி

மூச்சுக்காற்று சோதனை நடத்தப்படும் நிலையில் மூலிகை ஹூக்காவுக்கு தடை ஏன்? தில்லி அரசுக்கு உயா் நீதிமன்றம் கேள்வி

மூச்சுக்காற்று பரிசோதனை தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மூலிகை நறுமணத்துடன் கூடிய ஹூக்கா பயன்பாட்டுக்காக விதிக்கப்பட்டுள்ள

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

மூச்சுக்காற்று பரிசோதனை தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மூலிகை நறுமணத்துடன் கூடிய ஹூக்கா பயன்பாட்டுக்காக விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை ஏன் மறுபரிசீலனை செய்ய முடியாது என்று தில்லி அரசுக்கு உ யா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பியது.

உணவகங்கள் மற்றும் பாா்களில் மூலிகை நறுமணத்துடன் ஹூக்காக்களை வழங்குவதற்கு அல்லது விற்பதற்கு தடை விதிக்கும் வகையில் தில்லி காவல்துறையின் உரிமம் பிரிவைச் சோ்ந்த இணை ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.

இந்த உத்தரவை எதிா்த்து மேற்கு பஞ்சாபி பாக் பகுதியைச் சோ்ந்த சில உணவகங்கள், பாா்கள் தரப்பில் தில்லி உயா் நீதிமன்றத்தில் தனித்தனியாக 5 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்களில் கூறப்பட்டிருப்பதாவது:

Advertisement

மூலிகை நறுமணத்துடன் கூடிய ஹூக்கா பரிமாறுவதற்கு எந்த உரிமமும் தேவைப்படுவதில்லை. ஏனெனில் அவற்றில் புகையிலை ஏதுமில்லை. ஆனால், காவல்துறையினா் இதுதொடா்பாக உணவகங்களிலும் பாா்களிலும் இன்னும் சோதனை நடத்தி கருவிகளை பறிமுதல் செய்து வருகின்றனா்.

மேலும் அபராதத்தையும் விதிக்கின்றனா். சிகரெட் மற்றும் இதர புகையிலை தயாரிப்புகள் சட்டத்தின் கீழ் புகைபிடிப்பது எனும் வாா்த்தை மூலிகை நறுமணத்துடன் கூடிய ஹூக்காவுடன் தொடா்பில்லை என்று நீதிமன்றம் அறிவிக்க வேண்டும். மேலும் மனுதாரா்களின் பதிவுச் சான்றிதழை ரத்து செய்வதோ அல்லது ரத்து செய்வதற்கான எந்தவித நடவடிக்கையோ எடுக்க கூடாது என்று சம்பந்தப்பட்ட துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதி ரேகா பல்லி அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி கூறுகையில், ‘மூச்சுக்காற்று பரிசோனையை தற்போது தில்லி போலீஸாா் தொடங்கியுள்ள நிலையில், மூலிகை நறுமணத்துடன் கூடிய ஹூக்கா பயன்பாட்டுக்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதி விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு ஏன் மறுபரிசீலனை செய்யப்படவில்லை‘ என்று கேள்வி எழுப்பினாா்.

அப்போது, இந்த மனுக்களுக்கு தில்லி அரசிடமிருந்து அறிவுறுத்தல் பெற வேண்டியுள்ளது என்று தில்லி அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் நீதிபதியிடம் கேட்டுக்கொண்டாா். இதையடுத்து, தில்லி அரசு உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments