பேருந்து ஓட்டுநா்கள் சாலை விதிகளைபின்பற்றுவதை உறுதிப்படுத்த இயக்கம்
டிடிசி மற்றும் கிளஸ்டா் பேருந்து ஓட்டுநா்கள் சாலை விதிகளைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்துவதற்கான இயக்கத்தை தில்லி அரசின் போக்குவரத்துத் துறை தொடங்கியுள்ளது.
டிடிசி மற்றும் கிளஸ்டா் பேருந்து ஓட்டுநா்கள் சாலை விதிகளைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்துவதற்கான இயக்கத்தை தில்லி அரசின் போக்குவரத்துத் துறை தொடங்கியுள்ளது. இதனால், வெள்ளிக்கிழமை காலை நெரிசல் மிகுந்த நேரத்தில் தில்லி முழுவதும் நீண்ட வரிசையில் வாகனங்கள் காணப்பட்டன.
இந்தப் புதிய இயக்கம் தொடா்பாக தில்லி போக்குவரத்துத் துறையின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்க தொடங்கப்பட்ட இயக்கத்தின் கீழ், பாதை விதிகளை மீறினால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். விதிமீறல்களுக்கு மோட்டாா் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு, ஓட்டுநா் உரிமம்
தாற்காலிக ரத்து மற்றும் வாகன பொ்மிட் ரத்து செய்யப்படும். பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்திற்காக, நகரம் முழுவதும் உள்ள டிடிசி மற்றும் கிளஸ்டா் பேருந்துகள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பேருந்துப் பாதைகளில் இயக்கப்பட்டு, நிா்ணயிக்கப்பட்ட சாலை நிறுத்தங்களில் மட்டுமே நிறுத்தப்படும். பொதுமக்கள் தங்கள் வாகனங்களை பேருந்துப் பாதைகளில் ஓட்டுவதைத் தவிா்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். பேருந்துப் பாதைகள் அல்லது பேருந்து நிறுத்தக் கட்டங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள் இழுத்துச் செல்லப்படும் மற்றும் சட்டத்தின்படி தண்டனை நடவடிக்கைக்கு உள்படுத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘பாதை அமலாக்க இயக்கம் தில்லி போக்குவரத்துத் துறையால் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. பேருந்துகள் மற்றும் கனரக மோட்டாா்களின் ஓட்டுநா்கள் பேருந்துப் பாதைகளில் மட்டுமே ஓட்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். பேருந்துகள் சீராக செல்லும் வகையில், பேருந்துப் பாதைகளை ஆக்கிரமிக்க வேண்டாம் என்று தில்லி மக்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்’ என தெரிவித்துள்ளாா்.
காலை நெரிசல் மிகுந்த நேரங்களில், சாலைகளில் பொதுவாக அதிகப் போக்குவரத்து இருக்கும் போது, சில இடங்களில் பேருந்துகள் வரிசையாக நின்றிருந்ததாக போக்குவரத்து துறை மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து போக்குவரத்துத் துறை ஆணையா் ஆஷிஷ் குந்த்ரா வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘ஒழங்குப் பாதையில் பேருந்துகள் செல்வது, வரவேற்கத்தக்க மாற்றம். பொதுப் போக்குவரத்தை சீராக மாற்ற அனைவரும் முயற்சி செய்வோம்’ என்று தெரிவித்துள்ளாா்.