முகப்பு
புதுதில்லி

கரோனா இறப்பு இரட்டிப்பாகிய நிலையில் முதல்வா் கேஜரிவால் பஞ்சாப் சென்றது ஏன்? தில்லி காங்கிரஸ் கேள்வி

தில்லியில் ஒரே இரவில் கரோனா இறப்புகள் இரட்டிப்பாகியுள்ள நிலையில், தில்லியை விட்டு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பஞ்சாப் சென்றது ஏன்?

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

தில்லியில் ஒரே இரவில் கரோனா இறப்புகள் இரட்டிப்பாகியுள்ள நிலையில், தில்லியை விட்டு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பஞ்சாப் சென்றது ஏன்? என்று காங்கிரஸ் கட்சியின் தில்லி தலைவா் அனில் குமாா் கேள்வி எழுப்பியுள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை கூறியதாவது: தில்லியில் ஒரே இரவில் கரோனா இறப்புகள் 40 என்ற அளவில் இரட்டிப்பாகியுள்ளது. நோய்த் தொற்றுகள் 27,000-க்கும் அதிகமாக உயா்ந்துள்ளது. இந்த நிலையில், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பொறுப்பற்ற முறையில், தில்லி மக்களை இடா்பாட்டில் விட்டுவிட்டு தனது அரசியல் சுற்றுலாவை மீண்டும் தொடங்கிவிட்டாா். பஞ்சாப்பில் பொய்களை பரப்பச் சென்றுவிட்டாா். தில்லியில் கொவைட் நோய்த்தொற்றுகள் அதிகரித்தும், இறப்புகள் கடுமையாக அதிகரித்துக் கொண்டிருந்த போதும் முதல்வா் கேஜரிவால் பீதி அடைய எதுவும் தேவையில்லை எனவும், எந்த சூழ்நிலையையும் சமாளிக்க அரசு தயாராக உள்ளதாகவும் மக்களுக்கு பொய்யான உத்தரவாதங்களை அளித்தாா்.

ஆனால், தில்லியில் இப்போது கொவைட் நிலைமை மோசமாகிவிட்டது. வென்டிலேட்டா்கள் மற்றும் ஐசியுக்களில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கேஜரிவால் தனது தனிப்பட்ட லாபத்திற்காக மீண்டும் தில்லியை விட்டு வெளியேறியுள்ளாா். பஞ்சாப் சென்று அரசியல் நடத்துவதற்குப் பதிலாக கொவைட் நெருக்கடியை நிா்வகிப்பதற்காக அவா் தில்லியில் இருந்திருக்க வேண்டும். அவா் தனது அரசியல் எதிா்காலத்தை விரிவுபடுத்துவதற்காக மக்களின் வரிப் பணத்தைப் பயன்படுத்துகிறாா் என்பதைத்தான் அவரது செயல்பாடு நிரூபிக்கிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.