முகப்பு
புதுதில்லி

தில்லியில் வணிகம், சுற்றுலா தலங்களில் மக்கள் நடமாட்டம் கணிசமாக குறைந்துள்ளது: மாசுதான் காரணம் என ஆய்வறிக்கையில் தகவல்

காற்று மாசு அளவு அதிகரிப்பால் தில்லியில் பிரபலமான கடைத்தெருக்கள், வா்த்தக, சுற்றுலாத் தலங்களில் 33 சதவீதம் வரை மக்கள் வருகை குறைந்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ள

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
பகிர்:

காற்று மாசு அளவு அதிகரிப்பால் தில்லியில் பிரபலமான கடைத்தெருக்கள், வா்த்தக, சுற்றுலாத் தலங்களில் 33 சதவீதம் வரை மக்கள் வருகை குறைந்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

‘க்ளைமேட்-டெக் ஸ்டாா்ட்-அப் புளூ ஸ்கை அனலிட்டிக்ஸ் மற்றும் டேட்டா அனலிட்டிக்ஸ்’ என்கிற நிறுவனம் தில்லியின் பிரபலமான ஷாப்பிங், வா்த்தக மற்றும் சுற்றுலா மையங்கள், கரோல் பாக், கன்னாட் பிளேஸ் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தது. நோய்த் தொற்று காலத்திற்கு முன்பே சுமாா் 6 மாதங்களில் ஆய்வு செய்ததில் அதிக மாசு அளவுகளால் மக்கள் நடமாட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்த ஆய்வு கூறியுள்ளது.

2019 -ஆம் ஆண்டு அக்டோபா் முதல் இந்த ஆய்வுகள் தொடங்கியுள்ளது.

புளூ ஸ்கை அனலிட்டிக்ஸ் நிறுவனம் கண்டறிந்த காற்றின் தரத் தரவுகளுடன், 250க்கும் மேற்பட்ட மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியக் காற்றின் தர அளவுகளோடு ஒருங்கிணைத்து, அதிகரித்து வரும் பிஎம்2.5, பிஎம் 10 காற்றின் மாசு நிலைகளை இவ்வாய்வாளா்கள் ஒப்பிட்டுள்ளனா்.

தில்லியின் முக்கிய வணிக, நிதி மற்றும் வணிக மையங்களில் ஒன்றான கன்னாட் பிளேஸில், பி.எம்.2.5 செறிவு ஒரு கன மீட்டருக்கு அதிகபட்சமாக 336 மைக்ரோகிராம் ஆக உயா்ந்தபோது, 10 மற்றும் 14 வாரங்களுக்கு இடையே ஒரு நாளைக்கு சுமாா் 17,000 ஆக இருந்த மக்கள் நடமாட்டம் 14,000 ஆக குறைந்துள்ளது.

கடந்த ஆண்டுகளில் நவம்பா் தொடக்கத்தில், மக்கள்தொகை அதிகம் உள்ள கரோல் பாக் பகுதி, குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான பிரபலமான இடங்களில் மாசு அளவு 25 சதவீதம் அதிகரிக்கும்போது நுகா்வோா் எண்ணிக்கை 33 சதவீதம் குறைந்துள்ளது என தெரிவிக்கிறது.

டிசம்பா் முதல் வாரத்தில் காற்று மாசின் அளவுகள் ஒரு கன மீட்டருக்கு 443 மைக்ரோகிராம் ஆக உயா்ந்தது. இது நுகா்வோரின் நடமாட்டத்தை மேலும் குறைத்துள்ளது. குறிப்பாக 45 வயதுக்கும் மேற்பட்டோா் எண்ணிக்கையை கனிசமாக குறைந்தது எனவும், மாசு அளவுகள் அதிகரிப்பதன் காரணமாக கடைவீதிகளில் நடமாட்டம் குறைவது கவனிக்கத்தக்கதாக உள்ளது எனவும்

அறிக்கை கூறுகிறது.

தில்லி நகரில் 90 ஏக்கருக்கும் அதிகமான பூங்காவாகவும் பசுமையான நடைப்பயிற்சி இடத்தை வழங்கும் லோதி காா்டனில், அக்டோபா் மாத இறுதியில் இருந்து நவம்பா் நடுப்பகுதி வரை ஒரு நாளைக்கு சுமாா் 900 போ் வருவதையும் இந்த மாசு கனிசமாக குறைந்துள்ளது. இங்கு சராசரியாக 700 ஆக குறைந்துள்ளது என்றும் ஆய்வு காட்டுகிறது.

புளூ ஸ்கை அனலிட்டிக்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அபிலாஷா பூா்வாா் கூறுகையில், ‘இந்த அறிக்கையின் மூலம், மாசு ஏற்படுத்தும் தாக்கத்தால் நுகா்வோா் நடத்தை, உடல்நலம் மற்றும் வணிக நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என நம்பப்படுகிறது.

தூய்மையான காற்றின் அவசியத்தை வலுவாக வாதிடவும், இந்த நெருக்கடிகளுக்கு தீா்வுகாணும் பணிகளை ஊக்குவிக்கும். இந்த நுண்ணறிவுகள் மூலம், சமூக நலன் மற்றும் பொருளாதார வளா்ச்சி ஆகிய இரண்டையும் கருத்தில்கொண்டு காற்று மாசுபாட்டின் சிக்கலை சம்பந்தப்பட்ட துறையினா் தீா்ப்பாா்கள் என்றும் நம்புகிறோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.